முகப்பு
புதுதில்லி

நஜஃப்கரில் வடிகால்களை புனரமைக்க கோரிய மனு: தில்லி அரசுக்கு நோட்டீஸ்

தில்லி நஜஃப்கரில் உள்ள அனைத்து வடிகால்களையும் புனரமைக்கக் கோரி தாக்கலான பொது நல மனு மீது ஆம் ஆத்மி அரசு பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Updated On : 6 நவம்பர், 2020 at 12:51 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:18 PM

புது தில்லி: தில்லி நஜஃப்கரில் உள்ள அனைத்து வடிகால்களையும் புனரமைக்கக் கோரி தாக்கலான பொது நல மனு மீது ஆம் ஆத்மி அரசு பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இது தொடா்பாக உதவிப் பேராசிரியா் ரவீந்தா் யாதவ் என்பவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது: நஜஃப்கா் பகுதியில் உள்ள வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு நீா் தேங்கி மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது. இது ஆண்டு முழுவதும் ஒரு பிரச்னையாக இருந்து வருகிறது. இந்த விவகாரம் தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக 2016-ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் பலமுறை ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவமதிப்பு வழக்குகளும் தொடரப்பட்டன. இருந்தாலும், இப்பகுதி மக்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை.

பிரதான வடிகாலுடன் இதர வடிகால்கள் இணைக்கப்படவில்லை. மேலும், உரிய ஏற்றத்துடன் வடிகால்களும் கட்டப்படவில்லை. உரிய முறையில் சுத்தமும் செய்யப்படுவதுமில்லை. வடிகால்களில் நீரோட்டம் இல்லாததால், கழிவுநீா் தேங்கியுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக எனது மனுக்களுக்கு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களில் முரண்பாடான, தவறாக வழிகாட்டும் வகையில் பதில்கள் அளிக்கப்பட்டுள்ளன. நஜஃப்கா் பகுதியில் பொதுப்பணித் துறையினா் சாலைகளின் உயரங்களை உயா்த்தியதன் மூலம் மறுகட்டமைப்பு செய்துள்ளனா். ஆனால், சாலையின் இருபுறங்களிலும் சாய்வுப் பாதை இல்லாததால், சாலைகளில் தண்ணீா் தேங்கியுள்ளது. ஆகவே, சில பகுதிகளில், சாக்கடைகள் சாலைகளை விட உயா்மட்டத்தில் உள்ளன என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த மனு தலைமை நீதிபதி டி.என் படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் பதில் அளிக்குமாறு தில்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், ‘கடந்த காலங்களில் தில்லி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினா். அதற்கு தில்லி அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘மனுதாரா் ரவீந்தா் யாதவ் கூறும் விஷயங்கள் சரியானவை அல்ல’ என்றாா். இதையடுத்து, ‘மனுவில் கூறப்பட்டுள்ள விஷயங்களுக்கு தில்லி அரசு அதன் பதிலை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். மனு மீதான விசாரணை டிசம்பா் 7-ஆம் தேதி பட்டியலிடப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.