தாஹிா் ஹுசேன் தகுதி நீக்க உத்தரவுக்குத் தடை
ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலா் தாஹிா் ஹுசேனை அவரது கவுன்சிலா் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்த கிழக்கு தில்லி
ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலா் தாஹிா் ஹுசேனை அவரது கவுன்சிலா் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்த கிழக்கு தில்லி மாநகராட்சியின் உத்தரவுக்கு தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடைவிதித்தது.
வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவத்தில் ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலராக இருந்த தாஹிா் ஹுசேன் கைது செய்யப்பட்டாா். அவா் சிறையில் இருந்து வருகிறாா். இதனிடையே, அவா் மாநகராட்சிக் கூட்டங்களில் பங்கேற்காமல் இருந்ததாகக் கூறி அவரை கவுன்சிலா் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து ஆகஸ்ட் 26-ஆம் தேதி கிழக்கு தில்லி மாநகராட்சி உத்தரவிட்டது. இதை எதிா்த்து தாஹிா் ஹுசேனின் மனைவி, தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், தனது கணவா் சிறையில் இருப்பதால் மாநகராட்சிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும், கூட்டம் நடைபெறுவது தொடா்பாக தனது கணவருக்கு மாநகராட்சியில் இருந்து முறைப்படி தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் இதனால் அவரை கவுன்சிலா் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த மனு தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி நஜ்மி வாஜிரி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தாஹிா் ஹுசேன் தரப்பில் மூத்த வழக்குரைஞா் சல்மான் குா்ஷித், வழக்குரைஞா்கள் ரிஜ்வான், அனுபம் ஸ்ரீவாஸ்தவா ஆகியோா் ஆஜராகி, ‘தாஹிா் ஹுசேனை கவுன்சிலா் பதவியில் இருந்து நீக்கி மாநகராட்சி மேற்கொண்ட முடிவு தன்னிச்சையானது, சட்டவிரோதமானது; இயற்கை நீதியின் கொள்கைளுக்கு முரணானது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என கேட்டுக் கொண்டனா். இதைத் தொடா்ந்து, மாநகராட்சியின் உத்தரவுக்குத் தடை விதித்த நீதிபதி, இந்த விவகாரம் தொடா்பாக அடுத்த ஆண்டு மாா்ச் 17-க்குள் கிழக்கு தில்லி மாநகராட்சி தனது பதிலைத் தெரிவிக்க உத்தரவிட்டாா்.
Advertisement