ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதில் சிக்கல்! ஈரான் பொருத்திய கண்ணிவெடிகள் மாயம்?
ஹோர்முஸ் நீரிணையில் பொருத்திய கண்ணிவெடிகளைக் கண்டறிய முடியாமல் ஈரான் படைகள் தவிப்பு...
ஹோர்முஸ் நீரிணையின் பாதையில் ஈரான் படைகள் பொருத்திய கண்ணிவெடிகளைக் கண்டறிய முடியவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அந்தப் பாதையை முழுவதுமாகத் திறக்க முடியாத சூழல் உருவாகக் கூடும் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக நடைபெற்ற போரில், எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரானின் படைகள் முடக்கின. இதனால், சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு உருவானது.
இந்தப் போரின்போது அனுமதியின்றி ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற சில வெளிநாடுகளின் கப்பல்கள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தின. மேலும், அவ்வழியாக கப்பல்கள் செல்வதைத் தடுக்க சிறிய படகுகள் மூலம் ஈரானின் புரட்சிகர காவல் படையினர் கண்ணிவெடிகள் பொருத்தின.
Advertisement
இந்தப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த ஏப். 7 அன்று 2 வாரங்களுக்கு அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஹோர்முஸ் நீரிணையின் குறிப்பிட்ட பாதையின் வழியாக சர்வதேச நாடுகளின் கப்பல்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதால், எரிபொருள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் விநியோகம் சற்று இயல்புநிலைக்குத் திரும்புகிறது.
இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் பொருத்திய கண்ணிவெடிகளைக் கண்டறிய அந்நாட்டு படைகளால் முடியவில்லை எனவும், அவை கடலின் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கக் கூடும் எனவும் நியூயார்க் டைம்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாகத் திறக்க முடியாத சூழல் உருவாகி, சர்வதேச எரிபொருள் விநியோகம் பாதிப்படையும் என அஞ்சப்படுகிறது. ஆனால், இதுபற்றி ஈரான் அரசின் தரப்பிலிருந்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
முன்னதாக, ஈரானின் அணுசக்தித் திட்டத்துக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில், கடந்த பிப். 28 அன்று அந்நாட்டின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.