அமெரிக்க படைகள் வாபஸ்! ஹோர்முஸை கடந்த 1.25 கோடி பீப்பாய் எண்ணெய் கப்பல்கள்!
ஈரானுக்கு எதிரான கடல்வழி முற்றுகையை அமெரிக்கா திரும்பப் பெற்றது பற்றி...
ஈரான் துறைமுகங்களுக்கு எதிரான கடல்வழி முற்றுகையைத் திரும்பப் பெற்றுவிட்டதாக அமெரிக்க ராணுவம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
உலகெங்கிலும் நீண்ட நாள்களாக எதிா்பாா்க்கப்பட்ட ஈரான்-அமெரிக்கா இடையிலான போா் நிறுத்த ஒப்பந்தம் புதன்கிழமை கையெழுத்தானது.
இந்த நிலையில், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதை போல், ஈரான் துறைமுகங்களுக்கு எதிரான அனைத்து கடற்படை முற்றுகையையும் திரும்பப் பெற்றுவிட்டதாக அமெரிக்க மத்திய ராணுவ கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக அமெரிக்க ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வழிகாட்டுதலின்படி, ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து கடல் போக்குவரத்து மீதான தடையை அமெரிக்கப் படைகள் நீக்கியது.
ஈரான் துறைமுகங்களுக்கு அல்லது அங்கிருந்து வெளியேறும் கப்பல்களை அமெரிக்கப் படைகள் தடுக்காது. அமெரிக்க ராணுவ முற்றுகை அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களும் கடைப்பிடிக்கப்படுவதையும், முழுமையாகச் செயல்படுத்தப்படுவதையும் உறுதிசெய்ய, எங்களது கடற்படைக் கப்பல்கள் எல்லையில் நிலைநிறுத்தப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் செய்தியாளர்களுடன் பேசுகையில், அமெரிக்க முற்றுகை திரும்பப் பெறப்பட்டதை தொடர்ந்து, சரக்குக் கப்பல்கள் பயணத்தை தொடங்கியுள்ளன, நேற்று மட்டும் 1.25 கோடி பீப்பாய் எண்ணெய் கப்பல்கள் மூலம் சென்றதாக தெரிவித்தார்.
அதேபோல், ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ”பாரசீக வளைகுடா நீரிணை வழியாகச் செல்ல விரும்பும் கப்பல்களுக்கு விரைவான அனுமதி வழங்க அந்நாட்டின் நீரிணை நிர்வாகம் வழிவகை செய்யும். போரின்போது அப்பாதையில் பதிக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றும் தெரிவித்துள்ளது.