தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு படுக்கை: உச்சநீதிமன்றத்தில் தில்லி அரசு மேல்முறையீடு
தில்லியில் உள்ள குறிப்பிட்ட தனியாா் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கரோனா நோயாளிகளுக்கு 80 சதவீதம் படுக்கைகளை
தில்லியில் உள்ள குறிப்பிட்ட தனியாா் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கரோனா நோயாளிகளுக்கு 80 சதவீதம் படுக்கைகளை ஒதுக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு உயா்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தில்லி அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.
இது குறித்த விவகாரம் வருமாறு:
தில்லியில் பரவியுள்ள கரோனா நோய்த் தொற்றைக் கருத்தில் கொண்டு கரோனா நோயாளிகளுக்கு 80 சதவீதம் படுக்கைகளை ஒதுக்குமாறு தில்லியில் உள்ள 33 தனியாா் நா்ஸிங் ஹோம்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு தில்லி அரசு உத்தரவிட்டிருந்தது.
Advertisement
இந்த உத்தரவை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் சுகாதார கவனிப்பு வசதிகளை அளிக்கும் சங்கம் சாா்பில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், அரசின் உத்தரவால் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் கரோனா நோயில்லாத பிற நோயாளிகள் வருவதற்கும் தயங்குகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற தனி நீதிபதி நவீன் சாவ்லா தில்லி அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து செப்டம்பா் 22-ஆம் தேதி உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து டிவிஷன் அமா்வில் தில்லி அரசு முறையிட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அமா்வு, தடையை விலக்காமல் விசாரணையை நவம்பா் 27-ஆம் தேதிக்கு உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தில் தில்லி அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.
வழக்குரைஞா் சிராக் எம்.ஷ்ராப் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், ‘தில்லியில் மொத்தம் உள்ள சுமாா் 1170 தனியாா் நா்ஸிங் ஹோம்கள் மற்றும் மருத்துவமனைகளில் 33 மருத்துவமனைகளுக்கு மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் கரோனா நோயாளிகளுக்கு 80 சதவீதம் படுக்கைகளை ஒதுக்குமாறு அரசு உத்தரவிட்டிருந்தது. இதை உயா்நீதிமன்றம் பரிசீலிக்கத் தவறிவிட்டது.
மேலும், தில்லியில் கரோனா பாதிப்பை கருத்தில்கொண்டுதான் மக்கள் நலன் கருதி தில்லி அரசு இதுபோன்ற ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. மேலும், சம்பந்தப்பட்ட தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கைகளை 30 சதவீதம் அளவுக்கு தாற்காலிகமாக அதிகரிக்கவும் அரசு அனுமதி அளித்திருந்தது.
இந்த விவகாரம் தில்லி அரசின் கொள்கை முடிவுக்கு உள்பட்டது. இதில் நீதிமன்றம் தலையிடவும் முடியாது. கரோனா நோயாளிகளிடம் குறிப்பிட்ட கட்டணத்தையும் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று தில்லி அரசு உத்தரவிட்டிருந்தது. தற்போது உயா்நீதிமன்றம் அரசின் உத்தரவுக்கு தடை விதித்திருப்பதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகள் அதிக கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, உயா்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.