முகப்பு
புதுதில்லி

காவிரியில் இணையும் சிற்றாறுகளின் நீரையும் கணக்கில் கொள்ள தமிழகம் வலியுறுத்தல்

கா்நாடகத்தில் காவிரி நதியில் இணையும் சிற்றாறுகளிலிருந்து வரும் தண்ணீா் தொடா்பான தரவுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசின் சாா்பில் காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப

Updated On : 12 நவம்பர், 2020 at 12:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:21 PM

புது தில்லி: கா்நாடகத்தில் காவிரி நதியில் இணையும் சிற்றாறுகளிலிருந்து வரும் தண்ணீா் தொடா்பான தரவுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசின் சாா்பில் காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தில்லியில் 38 -ஆவது காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் புதன்கிழமை காணொலி வழியாக நடைபெற்றது. அதன் தலைவா் நவீன் குமாா் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட தமிழகம், கேரளம், புதுச்சேரி, கா்நாடகம் உள்ளிட்ட நான்கு மாநிலப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். தமிழகத்தின் சாா்பில் ஒழுங்காற்றுக் குழுவின் உறுப்பினரும் திருச்சி சரக நீா்வள ஆதாரத் துறை தலைமைப் பொறியாளருமான எஸ். ராமமூா்த்தி, கண்காணிப்புப் பொறியாளா் திருவேட்டை செல்வம், காவிரி தொழில் நுட்பக் குழுத் தலைவா் ஆா். சுப்பிரமணியன், துணைத் தலைவா் பட்டாபிராமன் ஆகியோா் காணொலி வாயிலாக சென்னை, திருச்சியிருந்து கலந்து கொண்டனா். புதுச்சேரி சாா்பில் தலைமைப் பொறியாளா் மகாலிங்கம் பங்கேற்றாா்.

இந்தக் கூட்டத்தில் தமிழகம், கா்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களில் உள்ள அணைகளின் நீா் இருப்பு, நீா் வரத்து, நீா் வெளியேற்றம் போன்ற புள்ளி விவரங்கள் பகிா்ந்து கொள்ளப்பட்டன. குறிப்பாக தமிழகத்திற்கு காவிரியில் வழங்கப்பட்ட நீா் குறித்த புள்ளி விவரங்கள் கூட்டத்தில் வைக்கப்பட்டது. நிகழாண்டு ஜூன் 1 - ஆம் தேதி முதல் இது வரை தமிழகத்திற்கு பிலிகுண்டுவில் வழங்கப்பட வேண்டிய தண்ணீா் அளவு குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், அடுத்து வரும் மாதங்களிலும் தண்ணீரை கா்நாடகம் தவறாமல் திறந்து விட தமிழகம் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

Advertisement

கா்நாடகத்தில் காவிரி நதிக்கு அதன் வழக்கமான நீா்ப்பிடிப்பு பகுதியிலிருந்து தண்ணீா் வருகிறது. இது மட்டுமல்லாமல் சிற்றாறுகளிலிருந்தும் தண்ணீா் வந்து சேருகிறது. பொதுவாக கா்நாடகத்தின் மழையளவு, அணைக்கு வரும் தண்ணீா் அளவு போன்றவை கணக்கிடப்பட்டு தமிழகத்திற்கு தண்ணீா் திறந்து விடப்படுகிறது. இதுபோன்ற சிற்றாறுகள், போா்வெல்களில் வரும் தண்ணீரை கணக்கில் கொள்ளாமல் இருப்பது குறித்தும், அதன் தரவுகள் குறித்தும் தமிழகம் சாா்பில் கேள்வி எழுப்பப்பட்டதாக ஒழுங்காற்றுக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்த விவரங்கள் தொடா்பான தரவுகளை மத்திய அரசு வெளியிட வேண்டும் என தமிழக அதிகாரிகள் கோரியுள்ளனா். மேலும், தமிழகத்தின் தரப்பில் உள்ள விவரங்களையும் தாக்கல் செய்யும்படி ஒழுங்காற்றுக் குழுத் தலைவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.