அமர்நாத் யாத்திரை: ஏப்ரல் 15 முதல் முன்பதிவு தொடக்கம்!
அமர்நாத் புனித பயணம் மேற்கொள்வோருக்கான முன்பதிவு பற்றி..
அமர்நாத் புனித பயணம் மேற்கொள்வோருக்கான முன்பதிவு ஏப்ரல் 15 முதல் தொடங்க உள்ளது.
நடப்பாண்டு அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கான முன்பதிவு ஏப்ரல் 15 முதல் தொடங்கவுள்ளது. நாடு முழுவதும் உள்ள 554 குறிப்பிட்ட வங்கிக் கிளைகளில் தொடங்கவுள்ளது. இதையொட்டி, ஸ்ரீ அமர்நாத் ஆலய வாரியம் யாத்திரைக்கான நடைமுறைகளை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு குறிப்பிட்ட வங்கிக் கிளையிலும், ஒவ்வொரு யாத்திரை வழித்தடத்திற்கும் தினசரி ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் யாத்திரைக்கான முன்பதிவு மற்றும் அனுமதிச் சீட்டு வழங்குதல் ஆகியவை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
வழிகாட்டுதல்களின்படி, 13 முதல் 70 வயதுக்குள்பட்ட பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்யத் தகுதி பெற்றவர் ஆவர். அதே வேளையில் ஆறு வாரங்களுக்கு மேல் கர்ப்பமாக இருக்கும் பெண்கள், யாத்திரைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
2026-ஆம் ஆண்டு யாத்திரையைப் பொறுத்தவரை, ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரம் வாயிலாக முன்பதிவு மேற்கொள்ளப்படும். பயோமெட்ரிக் அங்கீகாரத்தில் ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்பட்டால், மாற்று ஏற்பாடாக வெப்கேமரா வாயிலாகப் புகைப்படம் எடுத்து, விவரங்களை நேரடியாக உள்ளீடு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
யாத்ரிகர்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் ஏப்ரல் 8-க்குப் பின்னர் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் கட்டாய மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன், ஒரு அனுமதிச் சீட்டிற்கு ரூ. 150 என்ற நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
இந்தச் செயல்முறைக்காக, 37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கட்டாய மருத்துவச் சான்றிதழ்களை வழங்க அதிகாரம் பெற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களின் பட்டியலை வாரியம் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால்தால், பஹல்காம் வழியாகச் செல்ல அனுமதிக்கப்படும் தேதி ஆகிய விவரங்கள் நுழைவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். பரிந்துரைக்கப்பட்ட அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றுமாறு யாத்திரிகர்களுக்கு ஆலய வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
ஜூலை 3 தொடங்கும் யாத்திரை ஆகஸ்ட் 9, 2026 அன்று நிறைவடைகின்றது.