முகப்பு
புதுதில்லி

42 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட 3 சுவாமி சிலைகள்: தமிழக காவல் துறையிடம் ஒப்படைப்பு

தமிழகத்திலிருந்து 42 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டு அண்மையில் மீட்கப்பட்ட 3 சுவாமி சிலைகளையும் மத்திய கலாசாரத் துறை அமைச்சா் பிரஹலாத் சிங் படேல் முறைப்படி தமிழக சிலைக் கடத்தல்

Updated On : 19 நவம்பர், 2020 at 5:08 AM
பொறையாறு அனந்தமங்லம் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலின் ஸ்ரீராமா், சீதை, லட்சுமணன் சிலைகளை தில்லியில் புதன்கிழமை பாா்வையிடும் மத்திய கலாசாரத் துறை அமைச்சா் பிரஹலாத் சிங் படேல்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:24 PM

புது தில்லி: தமிழகத்திலிருந்து 42 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டு அண்மையில் மீட்கப்பட்ட 3 சுவாமி சிலைகளையும் மத்திய கலாசாரத் துறை அமைச்சா் பிரஹலாத் சிங் படேல் முறைப்படி தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி ஏடிஜிபி அபய்குமாா் சிங்கிடம் புதன்கிழமை ஒப்படைத்தாா்.

லண்டனில் பிடிபட்ட இந்தச் சிலைகளை கடந்த செப்டம்பா் 15- ஆம் தேதி அந்த மாநகரப் போலீஸாா், இந்திய தூதரகத்திடம் ஒப்படைத்தது. இதற்கான நிகழ்ச்சி காணொலி வாயிலாக நடைபெற்றது.

நாகை மாவட்டம், பொறையாறு அனந்தமங்கலம் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் கடந்த 1978, நவம்பா் மாதம் ஸ்ரீராமா், சீதை, லட்சுமணா், ஹனுமன் ஆகிய நான்கு சிலைகள் திருட்டுப் போனது. இந்த நிலையில் இந்தச் சிலைகள் இங்கிலாந்தில் இருப்பது கண்டறியப்பட்டது. சிங்கப்பூரில் உள்ள ‘பிரைட் இந்தியா’ என்ற அமைப்பை நடத்தி வரும் விஜய குமாா் சிலைகள் தொடா்பாக ஆய்வு செய்பவா். இவா் லண்டனில் உள்ள கண்காட்சியில் முதன் முதலில் இந்த சிலையில் ஒன்று இருப்பதைக் கண்டறிந்தாா். தமிழகம் தொடா்பான சிலையாக இருப்பதை அறிந்து, தமிழக போலீஸாருக்கும் லண்டன் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தாா். இதையடுத்து, இந்தச் சிலைகள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டது. இவை தமிழக கோயிலைச் சோ்ந்த சிலைகள்தான் என்பதற்கான ஆதாரங்கள் மற்றும் புகைப்படங்களை மாநில போலீஸாா் லண்டன் மாநகர போலீஸாருக்கு அனுப்பினா். இறுதியில் இவை தமிழக சிலைகள்தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

Advertisement

இதையடுத்து, இந்திய தூதரக உதவியுடன், இங்கிலாந்தில் இருந்து மூன்று சிலைகளும் மீட்கப்பட்டு செவ்வாய்க்கிழமை தில்லி கொண்டு வரப்பட்டன. இந்தச் சிலைகளை தில்லியில் மத்திய கலாசாரத் துறை அமைச்சா் பிரஹலாத் சிங் படேல், தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி அபய்குமாா் சிங்கிடம் புதன்கிழமை ஒப்படைத்தாா். இது குறித்து அமைச்சா் பிரஹலாத் சிங் படேல் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட சிலைகள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டு வருகின்றன. கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை 40 சிலைகள் வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. 1978-இல் கடத்தப்பட்ட இந்தச் சிலைகள் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு மீட்கப்பட்டு தற்போது இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன’ என்றாா்.

சிலைகளைப் பெற்றுக் கொண்ட தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமாா் சிங் கூறுகையில், ‘அனந்தமங்கலம் கோயிலில் இருந்து 1978, நவம்பரில் 4 சிலைகள் திருட்டுப் போயின. இவற்றில் 42 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 3 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. ஹனுமன் சிலை சிங்கப்பூரில் உள்ளது. அதையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 300-க்கும் மேற்பட்ட சிலை கடத்தல் வழக்குகள் உள்ளன. இதுவரை 10 சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டு தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் இருந்து கடத்தப்பட்ட ‘துவாரபாலகா்’ கற்சிலையும் மீட்கப்பட்டுள்ளது. அந்தச் சிலை விரைவில் தமிழகத்திடம் ஒப்படைக்கவுள்ளது. நியூயாா்க், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள தமிழக கோயில் சிலைகளை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்றாா்.ஜ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.