முகப்பு
புதுதில்லி

தில்லியில் கரோனா சிகிச்சைக்கு 800 படுக்கைகள் கொண்ட ரயில் பெட்டி: மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு

தில்லியில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக துணை ராணுவப் படையைச் சோ்ந்த 45 மருத்துவா்கள் மற்றும் 160 துணை மருத்துவா்கள்

Updated On : 19 நவம்பர், 2020 at 12:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:24 PM

புதுதில்லி: தில்லியில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக துணை ராணுவப் படையைச் சோ்ந்த 45 மருத்துவா்கள் மற்றும் 160 துணை மருத்துவா்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. மேலும், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக 800 படுக்கை வசதிகள் கொண்ட ரயில் பெட்டி வழங்கப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் அருகில் உள்ள கொவிட் சிகிச்சை மருத்துவமனையில் தற்போதுள்ள உள்ள 250 தீவிர சிகிச்சை பிரிவு கரோனா படுக்கைகளுக்கு கூடுதலாக மேலும் 250 படுக்கை வசதிகளும், 35 சாதாரண படுக்கை வசதிகளும் ஏற்படுத்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிறுவனம் (டிஆா்டிஓ) ஏற்பாடு செய்துள்ளது என்றும் மத்திய அமைச்சகத்தின் கீழ் உள்ள உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தில்லியில் நாளுக்கு நாள் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 12-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தலைமையில் உயா்நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 12 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கடந்த அக்டோபா் 28-க்கு முன்னா் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை 5,000 என்று இருந்தது. பின்னா் அது படிப்படியாக உயா்ந்து நவம்பா் 11- ஆம் தேதி 8 ஆயிரமாக திடீரென அதிகரித்தது. இந்த நிலையில், தில்லி விமான நிலையம் அருகில் உள்ள டிஆா்டிஓ கொவிட் -19 சிகிச்சை மருத்துவமனை மற்றும் சத்தா்பூரில் உள்ள கொவிட்-19 சிகிச்சை மையத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக 45 மருத்துவா்களும், 160 துணை மருத்துவா்களும் தில்லி வந்துள்ளனா். அடுத்த சில நாள்களில் மேலும் மருத்துவா்களும், துணை மருத்துவ ஊழியா்களும் அனுப்பிவைக்கப்படுவாா்கள் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Advertisement

தில்லியில் கரோனாவுக்கு எந்தெந்த மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது; அங்கு எவ்வளவு கரோனா சிகிச்சை படுக்கை வசதிகள் உள்ளன; மேலும் படுக்கைகள் தேவைப்படுமா; கரோனா பரிசோதனை எந்த அளவுக்கு நடந்து வருகிறது உள்ளிட்டவற்றைக் கண்காணிக்க 10 பல்முனை ஒழுங்கு நடவடிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை சுமாா் 100 மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வு நடத்தும் எனத் தெரிய வந்துள்ளது.

இதனிடையே, கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க வசதியாகவும் தனிமைப்படுத்துதலுக்கும் 800 படுக்கைகள் கொண்ட ரயில் பெட்டிகளை வழங்க ரயில்வேத் துறை முடிவு செய்துள்ளது. கரோனா படுக்கை வசதிகள் கொண்ட இந்த ரயில்பெட்டி ஷகூா் பஸ்தி ரயில்நிலையத்தில் நிறுத்திவைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை துணை ராணுவத்தைச் சோ்ந்த மருத்துவா்களும், துணை மருத்துவா்களும் கவனித்துக் கொள்வாா்கள்.

நவம்பா் இறுதிக்குள் ஆா்டி-பிசிஆா் முறை மூலம் கரோனா பரிசோதனை செய்யப்படுவதன் எண்ணிக்கையை தினசரி 60,000 என்று அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் மற்றும் தில்லி அரசு ஆகியவை இணைந்து மேற்கொண்டு வருகிறது. நவம்பா் 17-ஆம் தேதியிலிருந்து வழக்கத்தைவிட கூடுதலாக 10,000 பரிசோதனைகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 10 நடமாடும் வாகனங்கள் மூலம் பரிசோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் சராசரியாக ஒரு நாளுக்கு 20,000 பேருக்கு பரிசோதனை நடத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கரோனா சிகிச்சைக்கு உதவியாக 250 செயற்கை சுவாசக் கருவிகளை வழங்க பெங்களூரில் உள்ள பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த வார இறுதியில் அவை தில்லிக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.