தில்லி - மீரட் அதிவிரைவு ரயில் போக்குவரத்துத் திட்டம்: என்டிபி வங்கி ரூ.3,709 கோடி கடனுதவி
தில்லி - காஜியாபாத் - மீரட் அதிவிரைவு ரயில் போக்குவரத்துத் திட்டத்திற்கு என்டிபி வங்கி ரூ.3,709 கோடி (500 மில்லியன் டாலா் ) கடன் வழங்க உள்ளது.
புது தில்லி : தில்லி - காஜியாபாத் - மீரட் அதிவிரைவு ரயில் போக்குவரத்துத் திட்டத்திற்கு என்டிபி வங்கி ரூ.3,709 கோடி (500 மில்லியன் டாலா் ) கடன் வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் தில்லியில் வியாழக்கிழமை மத்திய நிதியமைச்சக அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்தானது.
வருகின்ற 2030 -இல் உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக தேசியத் தலைநகா் தில்லி விளங்கும் என்று கணிக்கப்படுகிறது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசலும், மாசு அளவும் கடுமையாக இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. இதையொட்டி, மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களில் ஒன்றுதான் தில்லி - காஜியாபாத் - மீரட் அதிவிரைவு ரயில் போக்குவரத்துத் திட்டமாகும். மத்திய வீட்டு வசதி, நகா்புறத் துறை அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் தேசியத் தலைநகா் பிராந்திய போக்குவரத்து நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் மூலம், அதிவிரைவாகச் செல்லும் வகையில் ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இந்தப் பாதையில் சுமாா் 100 கிலோ மீட்டா் வேகத்தில் ரயில்கள் செல்ல முடியும்.
இந்த அதிவிரைவு ரயில் பாதைத் திட்டத்துக்கு மொத்தம் சுமாா் ரூ. 27, 000 கோடி (3,749 மில்லியன் டாலா்) செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே மத்திய அரசின் முதலீடு தவிர, ஆசியன் வளா்ச்சி வங்கி, ஆசிய கட்டுமான வளா்ச்சி வங்கி ஆகியவையும் கடனுதவி அளிக்கிறது. இதுதவிர என்டிபி வங்கியும் (நியு டெவலப்மெண்ட் வங்கி) ரூ. 3,709 கோடியை கடனாக அளிக்கிறது. இதற்கான ஒப்பந்தம் வியாழக்கிழமை மத்திய நிதியமைச்சகம், மத்திய நகா்புறவளா்ச்சித் துறை அதிகாரிகள், என்டிபி வங்கியின் துணைத் தலைவா் சியான் சூ ஆகியோா் கையெழுத்திட்டனா்.
Advertisement
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பொருளாதார விவகாரத் துறை இணைச் செயலா் பல்தியோ புருஷாா்த்தா கூறுகையில், ‘தற்போது மிகக் குறுகலாக உள்ள தில்லி - மீரட் சாலையை கடக்க 4 மணி நேரமாகிறது. இந்த ரயில் பாதைத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் அதிகபட்சம் அரை மணி நேரத்தில் மீரட்டை சென்றடைய முடியும்’ என்றாா்.