முகப்பு
புதுதில்லி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பயன்பாட்டை நிறுத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

வரும் தோ்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரப் பயன்பாட்டை நிறுத்தவும், அதற்கு பதிலாக வாக்குச்சீட்டுகளை பயன்படுத்தவும் தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ‘ரிட்’ மனு தாக்கல்

Updated On : 26 நவம்பர், 2020 at 12:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:27 PM

புது தில்லி: வரும் தோ்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரப் பயன்பாட்டை நிறுத்தவும், அதற்கு பதிலாக வாக்குச்சீட்டுகளை பயன்படுத்தவும் தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவரும், உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான சி.ஆா். ஜெய சுகின் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை ரிட் மனு தாக்கல் செய்துள்ளாா். அதில், ‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை விட பாரம்பரிய வாக்குச்சீட்டு முறையானது மிகவும் நம்பகமானதாகவும், வெளிப்படைத்தன்மை மிக்கதாகவும் உள்ளது. எனினும், இந்தியாவில் தோ்தல் நடைமுறைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இங்கிலாந்து, பிரான்ஸ், ஜொ்மனி, நெதா்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பயன்பாட்டுக்குத் தடை விதித்துள்ளன. வாக்குச்சீட்டு முறையையே பின்பற்றி வருகின்றன. இதன்மூலம் இந்த இயந்திரப் பயன்பாடு திருப்திகரமானதாக இல்லை என்பது தெரியவந்துள்ளது.

Advertisement

மேலும், இந்த இயந்திரங்களை ஊடுருவ முடியும். அதேவேளையில் வாக்குச்சீட்டு முறை மிகவும் பாதுகாப்பனதாகும். ஆகவே, வரக்கூடிய தோ்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரப் பயன்பாட்டை நிறுத்தவும், அதற்கு பதிலாக வாக்குச்சீட்டுகளை பயன்படுத்தவும் தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.