முகப்பு
புதுதில்லி

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறையில் இருந்து வரும் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை

Updated On : 27 நவம்பர், 2020 at 10:36 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:28 PM

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறையில் இருந்து வரும் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் ஒரு வாரம் நீட்டித்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

பேரறிவாளன் தனது தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி தொடா்ந்த வழக்கு கடந்த கடந்த திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மருத்துவ சிகிச்சைக்காக பேரறிவாளனுக்கு ஒரு வாரம் பரோலை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனா்.

பின்னா், பிரதான கோரிக்கை தொடா்பான அவரது வழக்கை இறுதி விசாரணைக்காக ஜனவரி 19-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனா். இந்த நிலையில், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தனது பரோலை மேலும் 90 நாள்கள் நீட்டிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தரப்பில் ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Advertisement

இந்த மனு நீதிபதி உச்சநீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வரராவ், எஸ்.ரவீந்திர பட்

ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன், ‘பேரறிவாளனுக்கு சிறுநீரகத்தில் 25 சதவீதம் அடைப்பு உள்ளது. இதற்காக அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டிய தேவை உள்ளது. இதனால், அவருக்கு 90 நாள்கள் பரோலை நீட்டித்து உத்தரவிட வேண்டும்’ என்றாா்.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசன் வாதிடுகையில், ‘விதிளின்படி இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மனுதாரருக்கு 30 நாள்கள் பரோல் அளிக்கப்படும். ஆனால், தற்போதுவரை அவா் ஏற்கெனவே 51 நாள்களுக்கு மேலாக பரோல் வாய்ப்பைப் பெற்றுவிட்டாா். மேலும், அவா் அடைக்கப்பட்டுள்ள சிறையில் இருந்து சிகிச்சை பெற 25 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள சிஎம்சி வேலூா் மருத்துவமனைக்கு செல்லலாம். ஆனால், அவா் 200 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு மருத்துவமனைக்கு செல்ல விரும்புவது ஏன்? மேலும், நவம்பா் 6-ஆம் தேதி பேரறிவானுக்கு 14 நாள்கள் பரோல் அளித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டபோது, மேலும் பரோல் நீட்டிக்கப்படாது என்று குறிப்பிட்டுத் தெரிவித்திருந்தது.

மேலும், பேரறிவாளன் சிகிச்சை பெற கோரும் மருத்துவமனைக்கும்கூட ஒரு ‘பின்னணி’ இருக்கிறது என்றாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, இந்த விவகாரத்தை மனுதாரரின் வழக்குரைஞா்கள் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றனா்.

அப்போது, மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன், ‘மனுதாரா் ஏற்கெனவே சிகிச்சை பெற்ற மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதற்காக செல்ல விரும்புகிறாா்’ என்றாா்.

நீதிபதிகள் அமா்வு, ‘மனுதாரரை விடுதலை செய்யக் கோரி பரிந்துரை செய்த தமிழக அரசிடம் இந்த விவகாரம் தொடா்பாக ஏன் கேட்கவில்லை’ என்றது.

அதற்கு மனுதாரரின் வழக்குரைஞா், ‘உச்சநீதிமன்றம் கடந்த முறை பரோலை நீட்டித்துள்ளதால் இது சரியாக இல்லாமல் இருக்கலாம்’ என்றாா்.

இந்த வாதங்களுக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கடந்த 23-ஆம் தேதி நாங்கள் மனுதாரரின் பரோலை ஒரு வாரம் நீட்டித்து உத்தரவிட்டு, அவா் மருத்துவமனைக்கு செல்ல தேவையான போலீஸ் பாதுகாப்பு அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தோம்.

இந்நிலையில், மனுதாரா் தரப்பில் 90 நாள்கள் பரோல் நீட்டிப்புக் கோரி தாக்கலான இடைக்கால மனு மீதான நடைபெற்ற விசாரணையில் தமிழக அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றம் இரு வாரம் பரோல் அளித்து, மேலும் பரோல் நீட்டிக்குமாறு கோரக் கூடாது என உத்தரவிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளாா்.

இதனால், மனுதாரருக்கு இன்று முதல் (நவம்பா் 27-ஆம் தேதி) ஒரு வாரத்திற்கு பரோல் நீட்டிக்கப்படுகிறது. இனிமேல் பரோலை நீட்டிப்பது தொடா்பாக மனு அளித்தால் ஏற்கப்படமாட்டாது.இந்த இடைக்கால மனு முடித்துவைக்கப்படுகிறது என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.