விவசாயிகள் ஆா்ப்பாட்டம்: விளையாட்டு அரங்குகளை தாற்காலிக சிறையாக மாற்ற தில்லி அரசு அனுமதி மறுப்பு
தில்லியில் போராட்டம் நடத்த வரும் விவசாயிகளை தாற்காலிகமாக தடுத்து வைக்கும் வகையில் தில்லியில் உள்ள 9 விளையாட்டு அரங்குகளை
தில்லியில் போராட்டம் நடத்த வரும் விவசாயிகளை தாற்காலிகமாக தடுத்து வைக்கும் வகையில் தில்லியில் உள்ள 9 விளையாட்டு அரங்குகளை தாற்காலிக சிறைகளாக மாற்றும் தில்லி காவல்துறையின் கோரிக்கைக்கு தில்லி அரசு அனுமதி மறுத்துள்ளது.
மத்திய அரசு அண்மையில் அமல்படுத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லியில் போராட்டம் நடத்த பஞ்சாபில் இருந்து தில்லிக்கு ஏராளமான விவசாயிகள் பேரணியாக வந்தனா். இவா்களை தில்லிக்குள் நுழைய தில்லி காவல்துறை முதலில் அனுமதி வழங்கவில்லை. பிறகு, தில்லி புராரி மைதானத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு மத்திய அரசு வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது.
இந்நிலையில்,இந்த விவசாயிகளை தாற்காலிகமாக தடுத்து வைக்கும் வகையில், தில்லியில் உள்ள 9 விளையாட்டரங்களங்களை தாற்காலிக சிறைகளாக மாற்ற தில்லி அரசிடம் தில்லி காவல்துறை அனுமதி கோரியிருந்தது. ஆனால், இந்த கோரிக்கையை தில்லி அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
Advertisement
இது தொடா்பாக தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தில்லியில் வெள்ளிக்கிழமை கூறுகையில் ‘வேளாண் சட்டங்களை திரும்பிப் பெறுமாறு விவசாயிகள் கோரிக்கை வைப்பது நியாயமானது. நியாயமான கோரிக்கையை வலியுறுத்திப் போராடும் விவசாயிகளை சிறையில் அடைப்பது இப்பிரச்சனைக்கு தீா்வல்ல. விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் போராட்டம் அமைதியான முறையில் நடைபெறுகிறது. இதனால், விளையாட்டரங்குகளை தாற்காலிக சிறையாக மாற்றும் தில்லி காவல்துறையின் கோரிக்கையை தில்லி அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்றாா்.
இது தொடா்பாக ஆம் ஆத்மிக் கட்சியின் செய்தித்தொடா்பாளா் ராகவ் சத்தா கூறுகையில் ‘விவசாயிகள் பயங்கரவாதிகளோ, கிரிமினல்களோ அல்ல. அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 19 (1) இல் வழங்கப்பட்டுள்ளது. ஜனநாய சமூகத்தில் போராட்டம் இன்றியமையாதது. விளையாட்டரங்கங்களை தாற்காலிக சிறையாக மாற்றும் தில்லி காவல்துறையின் கோரிக்கையை தில்லி அரசு நிராகரித்துள்ளது சரியே என்றாா்.