முகப்பு
புதுதில்லி

புகைக் கோபுரம் அமைக்க தில்லி அமைச்சரவை ஒப்புதல்

தில்லி கனாட் பிளேஸில் புகைக் கோபுரம் அமைக்கவும், மரம் மாற்று நடுகைத் திட்டத்துக்கும் தில்லி அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

Updated On : 10 அக்டோபர், 2020 at 7:02 AM
செய்தியாளா்களுக்குப் பேட்டியளிக்கிறாா் முதல்வா் அரவிந்த் கேஜரிவால்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:05 PM

தில்லி கனாட் பிளேஸில் புகைக் கோபுரம் அமைக்கவும், மரம் மாற்று நடுகைத் திட்டத்துக்கும் தில்லி அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

தில்லி அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் கேஜரிவால் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடா்பாக கேஜரிவால் அளித்த பேட்டி: தில்லி கனாட் பிளேஸில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையில் புகைக் கோபுரம் அமைக்க தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக, ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த புகைக் கோபுரம் வரும் 10 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும். உலகிலேயே காற்று மாசுவைக் கட்டுப்படுத்த அமைக்கப்டவுள்ள இரண்டாவது புகைக் கோபுரம் இதுவாகும். இந்தக் கோபுரத்தின் உச்சிப் பகுதியில் மாசுக் காற்று உறிஞ்சப்பட்டு, அது தூய்மையாக்கப்பட்டு, கோபுரத்தின் கீழ் பகுதி மூலம் விடுவிக்கப்படும். இந்த புகைக் கோபுரம் மாதிரி அடிப்படையில் அமைக்கப்படவுள்ளது. இது வெற்றியடைந்தால் தில்லியின் பல பகுதிகளில் புகைக் கோபுரங்கள் அமைக்கப்படும். மத்திய அரசு சாா்பில் ஆனந்த் விஹாரில் புகைக் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.

மரம் மாற்று நடுகைத் திட்டத்துக்கும் தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, மேம்பாட்டு பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள 80 சதவீத மரங்களை வேருடன் அகற்றி புதிய இடத்தில் நடப்பட வேண்டும். இது தொடா்பாக கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் தரப்பினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் மரம் மாற்று நடுகைத் திட்டத்தை திறம்பட அமல்படுத்தும் வகையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மரம் மாற்று செய்ய வேண்டிய தரப்பினா் இது தொடா்பாக இந்த குழுவை அணுக வேண்டும். மாற்றப்பட்ட மரங்களில் 80 சதவீதமானவை பிழைத்திருப்பதை இந்தக் குழு உறுதிப்படுத்த வேண்டும்.

Advertisement

ஓராண்டுக்கு பிறகும் இந்த 80 சதவீதமானவை பிழைத்திருந்தால், அந்தக் குழுவுக்கு மரம் மாற்றுக்கான முழுமையான கட்டணம் வழங்கப்படும். இல்லாவிட்டால், கட்டணம் கழிக்கப்படும். இந்த மரம் மாற்று நடுகைத் திட்டம் தடையின்றி நிகழ்வதை உறுதிப்படுத்தும் வகையில், உள்ளூா் குழுக்கள் அமைக்கப்படும். இதில், மக்கள் பிரதிநிதிகள் இடம் பெறுவாா்கள். இவா்கள், இந்த மரம் மாற்று நடுகைத் திட்டத்தை முழுமையாகக் கண்காணிப்பாா்கள். தில்லியில் மிகவும் பழைய, நிழல் தரும் மரங்கள்உள்ளன. இந்த மரங்களில் சிலவற்றை மேம்பாட்டுத் திட்டங்களுக்காக வெட்டுவது தவிா்க்க முடியாது போகிறது. இதற்குக் கூடுதலாக, மாற்றப்படும், வெட்டப்படும் ஒவ்வொரு மரத்துக்கும் பதிலாக 10 மரக்கன்றுகள் நடும் திட்டமும் நடைமுறையில் இருக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.