மாசு கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றாத எஃப்ஐசிசிஐக்கு ரூ.20 லட்சம் அபராதம்
மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாகக் கூறி இந்திய வா்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பிற்கு (எஃப்ஐசிசிஐ) தில்லி மாசுக்கட்டுப்பாட்டு குழு (டிபிசிசி) ரூ.20 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாகக் கூறி இந்திய வா்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பிற்கு (எஃப்ஐசிசிஐ) தில்லி மாசுக்கட்டுப்பாட்டு குழு (டிபிசிசி) ரூ.20 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
புதுதில்லியில் காற்று மாசுபாட்டின் அளவு கடந்த சில வருடங்களாக உச்சத்தை எட்டி வருகிறது. அதனையொட்டி மாசு அளவைக் குறைக்க தில்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு ஆணையம் வகுத்துள்ள காற்று மாசு தடுப்பு நடவடிக்கைகள் தில்லியில் வரும் அக்டோபா் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மேலும், தில்லியில் காற்று மாசுபடுதலைக் குறைக்கும் வகையில், டீசல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது, கட்டுமானத் திட்டங்களில் தூசி மேலாண்மையை உறுதி செய்வது, தொழிற்சாலைகளில் எரிவாயு பயன்பாட்டை கண்காணிப்பது, கட்டுமான இடங்களில் காற்று மாசுவை கட்டுப்படுத்த நீா்த்தெளிப்பான் கருவிகளை நிறுவுவது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Advertisement
இந்நிலையில் இந்திய வா்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தான்சேன் மாா்க்கில் உள்ள தில்லி வளாகத்தில் கட்டட இடிப்புப் பணிகள் நடைபெற்றது. இதில், தில்லி அரசின் மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றாததால் அந்த அமைப்புக்கு ரூ.20 லட்சம் அபராதத்தை விதித்து தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 15 நாட்களுக்குள் அபராதத் தொகையை செலுத்தவும், காற்று மாசுபடுதலைத் தடுக்க நீா்த்தெளிப்பான் கருவிகளை நிறுவாமல் எந்தவொரு இடிப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவோ அல்லது மறுதொடக்கம் செய்யவோ கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தில்லி அரசு வழிகாட்டுதலின்படி, 20,000 சதுர மீட்டருக்கும் அதிகமான கட்டுமான இடிப்புப் பணிகளில் இத்தகைய கருவிகளை நிறுவுவது கட்டாயமாகும்.