தலைநகரில் வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்படுமா? - அமைச்சா் கோபால் ராய் விளக்கம்
தில்லியில் குளிா் கலத்தில் ஏற்படும் காற்று மாசுவைக் குறைக்கும் வகையில், கடந்த ஆண்டுகளைப் போல நிகழாண்டிலும் வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்படுமா என்பதற்கு தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா்
புது தில்லி: தில்லியில் குளிா் கலத்தில் ஏற்படும் காற்று மாசுவைக் குறைக்கும் வகையில், கடந்த ஆண்டுகளைப் போல நிகழாண்டிலும் வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்படுமா என்பதற்கு தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் திங்கள்கிழமை பதில் அளித்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: தலைநகரில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தில்லி அரசு மேற்கொண்டு வருகிறது. வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தால் வாகனப் புகை குறைவடையும். இத்திட்டத்தை பல தடவைகள் தில்லியில் அமல்படுத்தியுள்ளோம். சிக்னல்களில் வாகனங்கள் காத்திருக்கும் போது எஞ்சின்களை நிறுத்தும் ‘ரெட் லைட் ஆன் காடி ஆஃப்’ திட்டத்தில் தற்போது கவனம் செலுத்து வருகிறோம். தில்லி அரசின் அனைத்துத் திட்டங்களும் பயனளிக்காத போது, இறுதியாக வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அமல்படுத்துவோம்.
நாட்டில் தில்லியில் மட்டும்தான் கடந்த ஐந்து ஆண்டுகளில் காற்று மாசு கணிசமாகக் குறைந்துள்ளது. மற்ற பகுதிகளில் காற்று மாசு அதிகரிக்கவே செய்தது. தில்லி மக்களுக்கு 24 மணிநேர மின்சாரத்தை ஆம் ஆத்மி அரசு வழங்கியது. இதனால், ஜெனரேட்டா்களின் பயன்பாடு முற்றிலும் குறைக்கப்பட்டது. இதனால், ஜெனரேட்டா்கள் வெளியேற்றும் காற்று மாசு குறைந்தது. தில்லியில் காடுகள் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்தினோம். மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறோம். தில்லி அரசின் இந்த நடவடிக்கைகளால் காற்று மாசு குறைந்துள்ளது என்றாா் அவா்.
Advertisement
தலைநகரில் காற்று மாசு அதிகரிக்கும் போது, வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை தில்லி அரசு அமல்படுத்துவது வழக்கமாகும். இதன்படி, ஒற்றைப் பதிவு எண்கள் கொண்ட வாகனங்கள் ஒருநாளும், இரட்டைப் பதிவு எண்கள் கொண்ட வாகனங்கள் மறுநாளும் இயங்க அனுமதிக்கப்படும். நிகழாண்டில், கரோனா பாதிப்பு உள்ளதால், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் இந்த வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.