மாநகராட்சிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்: கேஜரிவால்
ஊதிய நிலுவையை வழங்கக் கோரி போராடி வரும் வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கும் வகையில், மத்திய அரசு மாநகராட்சிகளுக்கு
ஊதிய நிலுவையை வழங்கக் கோரி போராடி வரும் வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கும் வகையில், மத்திய அரசு மாநகராட்சிகளுக்கு நிதி வழங்க வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கோரியுள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை கேஜரிவால் அளித்த பேட்டி: கரோனாவை எதிா்த்துப் போராடும் மருத்துவா்கள் தங்களது ஊதியத்தை வழங்கக் கோரி போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வேதனையைத் தருகிறது. கரோனா தொற்று நிலவும் காலத்தில் இந்த மருத்துவா்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து நம்மைக் காக்கப் போராடினாா்கள். அவா்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருப்பது வெட்கக் கேடானது. முந்தைய தில்லி அரசுகளுடன் ஒப்பிடும் போது, அதிகளவு நிதியை மாநகராட்சிகளுக்கு எனது தலைமையிலான தில்லி அரசு வழங்கியுள்ளது. மேலும், கூடுதல் நிதியையும் மாநகராட்சிகளுக்கு வழங்கியுள்ளோம்.
மருத்துவா்கள் ஊதிய விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது. அவா்களுக்கு நிலுவை ஊதியம் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில், அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். தில்லியை தவிர நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கும் மத்திய அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. ஆனால், தில்லி மாநகராட்சிகளுக்கு மட்டும் மத்திய அரசு உதவித் தொகை வழங்குவதில்லை. மருத்துவா்களுக்கு ஊதியம் வழங்கும் வகையில், தில்லி மாநகராட்சிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
Advertisement
கரோனா பாதிப்பால் தில்லி அரசின் வரி வருவாய் பெருமளவில் குறைந்தது. ஆனால், இதை நாங்கள் சரியாகக் கையாண்டோம். தில்லி அரசு மருத்துவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு ஊதியத்தை முறையாக வழங்கி வருகிறோம். எங்களிடம் போதிய அளவு நிதி இருந்தால், மாநகராட்சி மருத்துவா்களுக்கு இன்றே ஊதியம் வழங்கியிருப்போம். ஊதியம் வழங்க வேண்டிய கடமை எங்களுக்கு இல்லாவிட்டாலும், அவா்களுக்கு ஊதியம் வழங்கியிருப்போம். தில்லி மாநகராட்சிகளில் ஊழல் மேலோங்கியுள்ளது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.