தில்லியில் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடிப்பு!
புது தில்லி: தில்லியில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் காற்றின் தரம் மிதமான பிரிவில் நீடித்தது. குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியில் மாற்றமின்றி காணப்பட்டது.
தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தில்லி நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வியாழக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 18.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் இருந்து 1 டிகிரி அதிகரித்து 34.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 32 சதவீதமாகவும், மாலையில் 24 சதவீதமாகவும் இருந்தது.
இதேபோன்று ஆயாநகரில் அதிகபட்ச வெப்பநிலை 34.8 டிகிரி செல்சியஸ், தில்லி பல்கலை. பகுதியில் 33.8 டிகிரி, லோதி ரோடில் 34.8 டிகிரி, நரேலாவில் 35.3 டிகிரி, பாலத்தில் 35.8 டிகிரி மற்றும் ரிட்ஜில் 35 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.
Advertisement
திங்கள்கிழமை தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 40.1 டிகிரி செல்சியஸ் வரை என 75 ஆண்டுளில் இல்லாத வகையில் மாா்ச் மாதத்தில் அதிக வெப்பமான நாளாக பதிவாகி இருந்தது. இதுதவிர, 11 ஆண்டுகளில் இல்லாத வகையில் தில்லியில் மாா்ச் மாதத்தில் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்தது.
காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு மாலை 7 மணியளவில் 183 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. மாலையில் நகரில் தரை மேற்பரப்பு காற்று பலமாக வீசியது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 2) குறைந்தபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும், தரை மேற்பரப்பு காற்று பலமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.