முகப்பு
புதுதில்லி

தில்லியிலிருந்து மீரட்டுக்கு 45 நிமிடங்களில் செல்லலாம்!

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:54 PM
பகிர்:

புதுதில்லி: தில்லி-மீரட் இடையிலான விரைவுச்சாலை பொதுப் போக்குவரத்துக்கு வியாழக்கிழமை திறந்துவிடப்பட்டுள்ளது. வழக்கமாக தில்லியிலிருந்து மீரட்டுக்கு சாலை வழியாகச் செல்ல 3 மணி நேரம் ஆகும். ஆனால், விரைவுச்சாலை திறக்கப்பட்டுள்ளதால், இனி 45 நிமிடங்களில் மீரட்டை சென்று அடையலாம்.

தில்லி-மீரட் விரைவுச்சாலையை வியாழக்கிழமை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி திறந்துவைத்தாா். இதன் மூலம் இரண்டு நகரங்களுக்கான பயண நேரம் 180 நிமிடங்களிலிருந்து 45 நிமிடங்களாகக் குறைந்துள்ளது. இந்த எக்ஸ்பிரஸ் விரைவுச்சாலை தில்லி, சராய் கலே கான், அக்க்ஷா்தாம், இந்திராபுரம், தாஸ்னா, போஜ்பூா் வழியாக மீரட் செல்கிறது. காா் போன்ற வாகனங்கள் மணிக்கு 100 கி.மீ. வேகத்திலும், சரக்கு வாகனங்கள் மணிக்கு 80 கி.மீ. வேகத்திலும் செல்ல வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இனி போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. வாகனங்களின் புகையும் கட்டுப்படுத்தப்படும்.

தில்லி-மீரட் விரைவுச்சாலை ரூ.8.346 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 82 கி.மீ. தொலைவுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் விரைவுச்சாலையில் நீளம் 60 கி.மீ. ஆகவும், தேசிய நெடுஞ்சாலையில் தொலைவு 22 கி.மீ. ஆகவும் உள்ளது. இந்த விரைவுச்சாலையில் 24 சிறிய மற்றும் பெரிய பாலங்களும் 10 மேம்பாலங்களும் அமைந்துள்ளன. விரைவுச்சாலையில் மின்விளக்குகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4,500 விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களும் நிறுவப்பட்டுள்ளன என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments