ஐசிசி மார்ச் மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் சஞ்சு சாம்சன், பும்ரா!
ஐசிசி மார்ச் மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் சஞ்சு சாம்சன், பும்ரா உள்ளிட்ட இருவரும் இடம்பெற்றுள்ளதைப் பற்றி...
ஐசிசி மார்ச் மாத விருதுக்கான போட்டியில் டி20 உலகக் கோப்பையில் ஜொலித்த இந்திய நட்சத்திர வீரர்கள் சஞ்சு சாம்சன், பும்ரா உள்ளிட்ட இருவரும் இடம்பெற்றுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
அதன்படி, மார்ச் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த விளையாட்டு வீரருக்கான போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா இருவரும் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் தென்னாப்பிரிக்க அணியின் இளம்வீரர் கானர் எஸ்தர்ஹுய்சனும் இணைந்துள்ளார்.
Advertisement
டி20 உலகக் கோப்பைத் தொடரின் தொடக்க ஆட்டங்களில் வாய்ப்பு கிடைக்காமல் திணறிய சஞ்சு சாம்சன், இறுதி ஆட்டங்களில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 97* ரன்கள் விளாசி, இந்திய அணி அரையிறுதிக்குச் செல்ல உதவினார்.
அதேபோல, அரையிறுதிப் போட்டியிலும், நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியிலும் தலா 89 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார் சஞ்சு சாம்சன். பேட்டிங்கில் அசத்திய சஞ்சு சாம்சன், 5 போட்டியில், 3 அரைசதம் உள்பட 321 ரன் குவித்து தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
சஞ்சுவைப் போலவே, இந்தத் தொடரில் பந்து வீச்சில் மிரட்டிய பும்ரா, 8 போட்டிகளில் 14 விக்கெட் கைப்பற்றி, அதிக விக்கெட் எடுத்த பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தை சகவீரர் வருண் சக்ரவர்த்தியுடன் பகிர்ந்து கொண்டார். இறுதி ஆட்டத்தில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைக் கைப்பற்றினார் பும்ரா.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமான கானர் எஸ்தர்ஹுய்சன், 5 போட்டிகளில் விளையாடி 200 ரன்கள் குவித்து தொடரை வெல்ல உதவியிருந்தார். அதனால், அவரும் ஐசிசி மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரர்களுக்கான போட்டியில் இடம்பெற்றுள்ளார்.
இதையும் படிக்க... ஐபிஎல் வரலாற்றில் முதல் வேகப் பந்துவீச்சாளர்... புதிய சாதனை படைத்த புவனேஷ்வர் குமார்!