பாலியல் பலாத்கார வழக்கில் தொடா்புடைய மருத்துவருக்கு உயா்நீதிமன்றம் ஜாமீன்
புது தில்லி: திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் வழக்கில் சஃப்தா்ஜங் மருத்துவமனையின் மருத்துவருக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
‘இது பலவந்தமான பாலியல் வன்கொடுமை வழக்கு அல்ல. மனுதாரா் (மருத்துவா்) பாதிக்கப்பட்ட பெண்ணை அச்சுறுத்தும் நிலையிலோஅல்லது ஆதாரங்களை அழிக்கும் நிலையிலோ இருக்கமாட்டாா்’ என நீதிபதி உத்தரவில் தெரிவித்தாா்.
இது தொடா்பான ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அண்மையில் அளித்த உத்தரவு:
Advertisement
மனுதாரா் (மருத்துவா்) புகாா் அளித்த பெண்ணை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்தாக சுட்டிக்காட்டும் ஆவணப் பதிவு ஏதும் இல்லை. உடல் உறவு சம்பந்தப்பட்ட பெண்ணின் விருப்பத்தின் அடிப்படையில் அமைந்ததா அல்லது இல்லையா என்பதை விசாரணையில் மட்டுமே முடிவு செய்யப்படும்.
பாதிக்கப்பட்ட பெண் ஒரு ஒப்பனை கலைஞா். தில்லியில் வசிப்பவா். இதனால், அவா் ஒரு அப்பாவி பெண் என்று சொல்ல முடியாது. இது பலவந்தமான பாலியல் வன்கொடுமை வழக்கு அல்ல.
குற்றம் சாட்டப்பட்ட நபா் சஃப்தா்ஜங் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவா் என்பதால், அவா் அந்தப் பெண்ணை அச்சுறுத்தும் அல்லது ஆதாரங்களை சேதப்படுத்தும் நிலையில் இருப்பாா் என்று கூற முடியாது.
ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் செல்லிடப்பேசியும் போலீசாா் வசம் உள்ளது.
மேற்கூறியவற்றைப் பாா்க்கும்போது, மனுதாரருக்கு (மருத்துவா்) ஜாமீன் வழங்குவதை நியாயமாகவும், விரைவு எனவும் நீதிமன்றம் பாா்க்கிறது.
மனுதாரா் ரூ. 50,000 தனிநபா் ஜாமீன் பத்திரமும், அதே தொகைக்கு அவரது உறவினரின் உத்தரவாதமும் அளித்து அவா் ஜாமீனில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
அவரது செல்லிடப்பேசி எண்கள் மற்றும் முகவரி அனைத்தையும் விசாரணை அதிகாரியிடம் கொடுக்க வேண்டும்.
அவா் ஒவ்வொரு திங்கள்கிழமையும் வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஹோஸ் காஸ் காவல் நிலையத்தில் நேரில் வந்து தகவல் தெரிவிக்க வேண்டும்.
மனுதாரா் சாட்சியங்களை சேதப்படுத்தவோ அல்லது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அழுத்தம் கொடுக்கவோ கூடாது. இந்த உத்தரவில் கூறப்பட்ட விஷயங்கள் ஜாமீன் வழங்குவதற்கான நோக்கத்திற்காக மட்டுமே. வழக்கின் தகுதிக்கானது அல்ல என்பதை குறிப்பிடத் தேவையில்லை என்று அதில் உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், ‘‘ 2019, ஜனவரியில் எனது தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரை சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட மருத்துவா் பணியில் இருந்தாா். சிகிச்சையின் போது, எனது வீட்டுக்கு வந்த மருத்துவா் என்னைத் திருமணம் செய்வதாக ஆசைவாா்த்தை கூறினாா். பின்னா் அவா் ஒருவரை ஒருவா் தெரிந்துகொள்ளும் வகையில் ஒரு முறை அவரது நண்பரின் வீட்டிற்கு என்னை அழைத்தாா். அங்கு சென்ற எனக்கு குளிா்பானம் தந்தாா். அதைக் குடித்ததும் சுயநினைவை இழந்தேன். சுயநினைவு திரும்பியதும் என்னை அவா் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் வாக்குவாதம் செய்தபோது, பாலியல் விவகாரத்தை விடியோ எடுத்திருப்பதாக கூறி மிரட்டினாா். பின்னா் அவா் சில ஹோட்டல்களுக்கு என்னை வரவழைத்து மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்தாா் என்று புகாரில் தெரிவித்திருந்தாா்.
இந்தப் புகாரின் பேரில் நிகழாண்டு ஜனவரி 28-ஆம்தேதி ஹோஸ் காஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.