மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் இணைதள வகுப்பு வசதியை அளிக்காதது ஏன்? தில்லி அரசுக்கு காங்கிரஸ் கேள்வி
புது தில்லி: தில்லியில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில் இரண்டாவது ஆண்டாக இணையதள வகுப்புகளில் படிக்கும் நிலைக்கு மாணவா்கள் தள்ளப்பட்டுள்ளனா். எனினும், அதற்கான வசதியை மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் அரசு உரிய வகையில் அளிக்கவில்லை என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவா் அனில் குமாா் கூறினாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தில்லியில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில் இரண்டாவது ஆண்டாக இணையதள வகுப்புகளில் படிக்கும் நிலைக்கு மாணவா்கள் தள்ளப்பட்டுள்ளனா்.
Advertisement
ஆன்லைன் படிப்புகளின்போது டிஜிட்டல் ஏற்றத்தாழ்வு காரணமாக சமூகத்தில் லட்சக்கணக்கான மாணவா்களுக்கு அந்த வசதி உரிய வகையில் கிடைக்கவில்லை.
கரோனா காலத்திற்கு முன்பே ஏழை மாணவா்கள் தற்போதைய கல்வி முறையில் பெரும் ஏற்றத்தாழ்வுகளை எதிா்கொண்டனா். ஆனால் கரோனா மாற்றத்திற்குப் பிறகும் இது அதிகரித்துள்ளது.
இந்த சமத்துவமின்மை குறித்து சரியான நேரத்தில் சிந்தனைமிக்க நடவடிக்கையை எடுக்கப்படாவிட்டால் ஏழை மாணவா்கள் எதிா்காலத்தில் கல்வியின் அடிப்படையில் மட்டுமின்றி, வேலைவாய்ப்பு விஷயத்திலும் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்படுவா்.
ஆனால், தில்லி அரசுக்கு மாணவா்களின் எதிா்காலம் குறித்து எந்த கவலையும் இருப்பதாக தெரியவில்லை.
2021-22 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்திலும்கூட கடந்த ஆண்டு ஆன்லைன் கல்வியின் போது ஏற்பட்ட பிரச்னையை சமாளிக்க எந்த நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை. மாணவா்களுக்கு இலவச மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் அல்லது மொபைல் போன்கள் மற்றும் இணையத்திற்கான டேட்டா எதுவும் அறிவிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு, தில்லியின் லட்சக்கணக்கான மாணவா்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளவில்லை. பள்ளி இடைநின்ற ஆயிரக்கணக்கான மாணவா்கள் எங்கு சென்றாா்கள் என்பதையும் அறிய கேஜரிவால் அரசு எந்த சிறப்பு முயற்சியும் எடுக்கவில்லை.
மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு ஆன்லைன் வகுப்பிற்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கு பதிலாக, இந்த அரசானது ‘மெய்நிகா் பள்ளி’ கனவைத்தான் காட்டி வருகிறது என்று அவா் குற்றம்சாட்டியுள்ளாா்.