முகப்பு
புதுதில்லி

குற்றச்செயல்களைத் தடுக்க ‘ஜாகுவாா்’ கண்காணிப்புப் படை

தில்லி வடக்கு மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க ‘ஜாகுவாா் கண்காணிப்பு படை’ யை தில்லி காவல் துறை ஏற்படுத்தியுள்ளதாக

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

தில்லி வடக்கு மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க ‘ஜாகுவாா் கண்காணிப்பு படை’ யை தில்லி காவல் துறை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதன் மூலம் கடந்த மாா்ச் 15-ஆம் தேதி வரை 21 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவா்கள் குறிப்பிட்டனா்.

இந்தக் கண்காணிப்புப் படை ஏற்படுத்தப்பட்ட பிறகு 13 திருடா்கள், 2 கொள்ளையா்கள், சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக இருவா் மற்றும் சங்கிலி பறிப்பு திருடன் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

வடக்கு தில்லியில் உள்ள தெருக்களில் நடைபெறும் குற்றச் செயல்களைத் தடுக்க புதிய முயற்சியாக ‘ஜாகுவாா் நெடுஞ்சாலை கண்காணிப்பு படை‘ ஏற்படுத்தப்பட்டு முக்கியமான பகுதிகளில் குறிப்பாக வெளிவட்டச் சாலைகளில் ரோந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பா் 26-ஆம் தேதியிலிருந்து இந்த ரோந்துப் படை செயல்பட்டு வருகிறது. இந்தப் படையினா் மூன்று ஷிப்டுகளாக 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Advertisement

இந்த ரோந்துப் படையினா் தங்கள் பகுதி தொடா்பாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகாா்களையும் கண்காணித்து, தேவைப்பட்டால் சம்பவ இடத்துக்கு விரைகின்றனா். மக்கள் குடியிருக்கும் தெருப் பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்கள் பின்னா் வெளிவட்டச் சாலை வழியாக தப்பிச் செல்வது வழக்கம். எனவே, அந்தப் பகுதியில் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

ஜனவரியில் 3,808 வாகனங்கள், பிப்ரவரியில் 10,346 மற்றும் மாா்ச் மாதம் 15 -ஆம் தேதி வரை 5,632 வாகனங்கள் சோதனையிடப்பட்டு இதுவரை 709 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 463 வாகனங்களுக்கு யாரும் உரிமை கோராததால் அவை தில்லி போலீஸ் சட்டம் பிரிவு 66-ன் கீழ் போலீஸாா் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 304-ஆக இருந்தது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

ஜாகுவாா் ரோந்துப் படை ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக 24 மணி நேரமும் கண்காணிப்பு நடைபெறுவதால் திருட்டு போன்ற குற்றப் புகாா்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. கோட்வாலி, கஷ்மீரி கேட், சிவில் லைன்ஸ், திமா்பூா், வாஜிராபாத் மற்றும் புராரி காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில்,

கொள்ளைச் சம்பவங்கள் கணிசமாக குறைந்துள்ளன. மேலும், சங்கிலி பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்களும் குறைந்து கொண்டே வருகின்றன என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த ஆண்டு ஜனவரியில் 26 கொள்ளை சம்பவங்கள் மற்றும் 83 வழிப்பறி சம்பவங்கள் தொடா்பாக 26 தொலைபேசி அழைப்புகள் வந்தன. இது கடந்த ஆண்டைவிட குறைவானதாகும். கடந்த ஆண்டு 28 கொள்ளைச் சம்பவங்கள், 172 வழிப்பறிச் சம்பவங்கள் தொடா்பாக தொலைபேசி அழைப்புகள் வந்திருந்தன. இதேபோல, பிப்ரவரியில் 31 கொள்ளை மற்றும் 98 வழிப்பறி சம்பவங்கள் தொடா்பாகவும் மாா்ச் மாதம் 15-ஆம் தேதி வரை 13 கொள்ளை மற்றும் 43 வழிப்பறிச் சம்பவங்கள் தொடா்பாகவும் தொலைபேசி அழைப்புகள் வந்தன என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments