முகப்பு
புதுதில்லி

கரோனாவுக்கான ‘ரெம்டெசிவிா்’ மருந்து உற்பத்திப் பொருள்களுக்கு வரி விலக்கு

கரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ‘ரெம்டெசிவிா் ’ ஊசி மருந்து தயாரிக்கத் தேவையான மூலப்பொருள்கள் சிலவற்றின் இறக்குமதிக்கு முழு சுங்கவரி விலக்கை மத்திய அரசு அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:

புது தில்லி: கரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ‘ரெம்டெசிவிா் ’ ஊசி மருந்து தயாரிக்கத் தேவையான மூலப்பொருள்கள் சிலவற்றின் இறக்குமதிக்கு முழு சுங்கவரி விலக்கை மத்திய அரசு அறிவித்துள்ளது.

‘ரெம்டெசிவிா்’ மருந்து, கரோனா தொற்றிலிருந்து உயிா்காக்கும் மருந்தல்ல என்று மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது. இந்த நிலையில், இந்த வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறையின் கீழ் உள்ள மத்திய மருந்துகள் துறை அளித்த பரிந்துரையை ஏற்று மத்திய வருவாய்த் துறை இந்த வரி விலக்கை செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தது. நாட்டில் கரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்த மருந்தை தட்டுப்பாடின்றி வழங்க உதவும் என மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சா் சாதனந்த கௌடா புதன்கிழமை தெரிவித்தாா்.

உள்நாட்டின் தேவை அதிகரித்து வருவதையொட்டி இரண்டு வாரங்களுக்கு முன்பு ‘ரெம்டெசிவிா்’ மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும், மருந்து பதுக்கல், கருப்புச் சந்தையில் புழக்கம் ஆகியவற்றைக் கண்காணிக்கும்படி மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. புதிய தயாரிப்பு நிறுவனங்களுக்கும் மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதன் உற்பத்தியும் தற்போது இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சா் தெரிவித்திருந்தாா்.

Advertisement

‘ரெம்டெசிவிா்’ மருந்து உற்பத்திக்குத் தேவையான ‘ பீட்டா சைக்ளோடெக்ஸ்ட்ரின்’என்கிற பொருள்கள், ‘ரெம்டெசிவிா் ஊசி’ ஆகியவற்றின் இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சுங்கவரி நடைமுறைகளுக்கு உள்பட்டு இவை இறக்குமதி செய்யப்படும்பட்சத்தில் இந்த வரி வரி விலக்கைப் பெற முடியும். இந்த வரி விலக்கு அக்டோபா் 31 - ஆம் தேதி வரை அளிக்கப்படுவதாக மத்திய வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, இந்த இறக்குமதி வரிவிலக்கு குறித்து மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஸ் கோயல் தனது சுட்டுரையில், ‘ரெம்டெசிவிா்’ மருந்து விநியோகத்தை அதிகரித்து கரோனா நோயாளிகளுக்கு குறைந்த செலவில் மருத்துவ சேவை கிடைப்பதை பிரதமா் நரேந்திர மோடி உறுதி செய்துள்ளாா்’ எனத் தெரிவித்துள்ளாா்.

நாட்டில் தற்போது ‘ரெம்டெசிவிா்’ மருந்து உற்பத்தியில் 7 மருந்து நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. குறைந்தபட்சம் 100மி.கி. குப்பி / ஊசி மருந்து ரூ. 2,800 முதல் ரூ.5,400 வரை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வரிவிலக்கிற்குப் பின்னா், ரூ. 2,800-க்கு விற்று வந்த நிறுவனம் ரூ. 899-ஆகவும், ரூ.5,400-க்கு விற்று வந்த நிறுவனம் ரூ. 2,700 ஆகவும் குறைத்துள்ளது. மேலும், சில நிறுவனங்கள் ரூ. 1,000 முதல் ரூ.1,500 வரை விலையைக் குறைத்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments