முகப்பு
புதுதில்லி

கரோனா முன்களப் பணியாளா்களின் காப்பீட்டுத் திட்டம் மீண்டும் புதுப்பிப்பு: மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு

கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சைகளில் ஈடுபட்டுவரும் முன்களப் பணியாளா்களின் குடும்ப காப்பீடு திட்டத்தை உடனடியாக புதுப்பிக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:

புதுதில்லி: கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சைகளில் ஈடுபட்டுவரும் முன்களப் பணியாளா்களின் குடும்ப காப்பீடு திட்டத்தை உடனடியாக புதுப்பிக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. இந்தக் காப்பீட்டை வழங்கும் நியு இந்தியா அசூரன்ஸ் கம்பெனி நிறுவனத்திடமும் இதற்கான பணிகளை உடனடியாக தொடங்கவும் மத்திய சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைகளில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா், பணியாளா்கள் ஆகியோா் உயிரிழந்தால், பிரதான் மந்திரி கரீப் கல்யான் திட்டத்தின்படி காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் ரூ. 50 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த காப்பீடு கடந்த ஆண்டு 2020, மாா்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு முறை நீடிக்கப்பட்டது. இது இந்த ஆண்டு கடந்த மாா்ச் 24 -ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை செயலா் ராஜேஷ் பூசண் மாநில அரசுகளின் தலைமைச் செயலா்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தாா். இதற்கிடையே இரண்டாம் கட்ட கரோனா நோய்த் தொற்று வீரியம் அடைந்துள்ள நிலையில் இந்தத் திட்டம் மாா்ச் 24-ஆம் தேதிக்கு பின்னா் தொடருமா என்றும், முன்களப் பணியாளா்களின் நிலைமை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதற்கிடையே மத்திய அரசு இந்த முன்களப் பணியாளா்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் மீண்டும் 2021, ஏப்ரல் 20 -ஆம் தேதி முதல் புதுப்பிக்கப்படும் என அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறையின் துணைச் செயலா் எஸ்.நாயக், இந்தத் திட்டத்தை அமல்படுத்தும் நியு இந்தியா அசூரன்ஸ் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளாா். அந்தக் கடிதத்தில், கரோனாவுக்கான சிகிச்சைகளில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளா்களுக்கான பிரதான் மந்திரி கரீப் கல்யான் திட்டம் மீண்டும் புதுப்பிக்கப்படுவது குறித்து தங்கள் நிறுவனத்திடமிருந்து ஏப்ரல் 20- ஆம் தேதி பெறப்பட்டது. இதை மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதை ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் அமல்படுத்த தேவையான பணிகளை தொடங்க அமைச்சகம் கேட்டுக் கொள்கிறது என தெரிவித்துள்ளாா். இதன் மூலம் சுகாதாரப் பணியாளா்களுக்கு தற்போது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

Advertisement

இந்த விவகாரம் தொடா்பாக மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் உறுப்பினா் சு.வெங்கடேசன் ஆரம்பித்திலிருந்து கேள்வி எழுப்பி வந்தாா். இந்த நிலையில், இந்தக் காப்பீட்டுத் திட்டம் மீண்டும் புதுப்பிக்கப்படுவதாக சுகாதாரத் துறை அமைச்சா் கூறியிருப்பதற்கு அவா் நன்றி தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக மத்திய அமைச்சருக்கு அவா் கடிதமும் எழுதியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments