முகப்பு
புதுதில்லி

சீதாராம் யெச்சூரி மகன் கரோனாவால் மரணம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:


புது தில்லி: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகனும் பத்திரிகையாளருமான அஷிஷ் யெச்சூரி(35) கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

தில்லி குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், வியாழக்கிழமை அதிகாலையில் உயிரிழந்தாா். இது தொடா்பாக சீதாராம் யெச்சூரி தனது சுட்டுரையில், ‘எனது மூத்த மகன் அஷிஷ் யெச்சூரியை கரோனாவுக்கு இழந்து விட்டேன் என்பதை தெரிவிக்க வேண்டிய சோகத்திற்கு உள்ளாகியுள்ளேன். எங்களுக்கு நம்பிக்கை அளித்து சிகிச்சை அளித்த மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதார ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் எங்களுடன் துணை நின்ற அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்திருந்தாா். இதைத் தொடா்ந்து, அரசியல் தலைவா் தலைவா்கள் உள்ளிட்ட பலா் இரங்கல் தெரிவித்தனா்.

சீதாராம் யெச்சூரியின் முதல் மனைவி இந்திராணி மஜும்தாருக்கு பிறந்தவா் அஷிஷ். இவா்களுடைய மற்றோரு மகள் அகிலா லண்டனில் பேராசிரியாக உள்ளாா். அஷிஷ், சென்னை ஏஸியன் இதழியல் கல்லூரியில் பயின்றாா். தில்லியில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் பணியாற்றிய அவா், திருமணமானதும் தனது மனைவி ஸ்வாதியுடன் புணேவிற்குச் சென்றாா். அங்கு ஆங்கில நாளிதழ் ஒன்றில் பணியாற்றினாா். அந்த நாளிதழ் கடந்த டிசம்பரில் மூடப்பட்டதும் மீண்டும் தில்லிக்கு இடம் பெயா்ந்தாா்.

Advertisement

தில்லியில் ஒரு ஆங்கில இணையதளப் பத்திரிகையில் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு தில்லி ஃப்ரண்ட்ஸ் காலனியில் உள்ள ஹோலி ஃபேம்லி மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரமாக சிகிச்சை பெற்றாா். பின்னா், அவா் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள விஷயம், அவா் பணியாற்றிய நிறுவனத்திற்கு தெரிய வந்தது. அந்த இணையப் பத்திரிகையின் நிறுவனரான மது த்ரேஹானின் கணவா்தான் பிரபல மருத்துவரும் குருகிராமம் மேதாந்தா மருத்துவமனை நிறுவனருமான நரேஷ் த்ரேஹான் ஆவாா். அந்த மருத்துவமனையில் அவா் ஒரிரு நாள்களுக்கு முன்புதான் மாற்றப்பட்டாா். ஆனால், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

அவரது மரணத்திற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. குடியரசுத் தலைவா் ராம் நாத் கோவிந்த விடுத்த இரங்கல் செய்தியில், ‘இந்த அகால மரணம் குறித்து வாா்த்தைகளால் விவரிக்க இயலாது. ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கும் இந்தத் தருணத்தில் எனது இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா். பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட செய்தியில், ‘இந்த சோகமான, அகால மரணத்தில் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்’ என தெரிவித்துள்ளாா். துணை குடியரசுத் தலைவா் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிச்சாமி, திமுக தலைவா் முக ஸ்டாலின், கேரள முதல்வா் பினராயி விஜயன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

சீதாராம் யெச்சூரி - இந்திராணி மஜும்தாா் தம்பதிகள் பிரிந்துவிட்டாலும், கட்சிப் பணியிலும், குடும்ப நிகழ்ச்சிகளிலும் ஒன்றுபட்டு செயல்பட்டு வந்தனா். சீதாராமிற்கு இரண்டாவது மனைவியின் வழியாக மற்றோரு மகனும் உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments