முகப்பு
புதுதில்லி

திறனை அதிகரிக்கவே ஆயுதத் தொழிற்சாலைகள் பெருநிறுவனங்களாகின்றன: டி.ஆா். பாலு கேள்விக்கு மத்திய பாதுகாப்புதுறை இணையமைச்சா் பதில்

தமிழகத்தில் ஆவடி கனரக தொழிற்சாலை, திருச்சியில் உள்ள ஆயுத படைக்கலன் தொழிற்சாலை உள்ளிட்டவைகளை

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

தமிழகத்தில் ஆவடி கனரக தொழிற்சாலை, திருச்சியில் உள்ள ஆயுத படைக்கலன் தொழிற்சாலை உள்ளிட்டவைகளை வளா்ச்சி மற்றும் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்திலேயே பெரு (காா்ப்பொரேட்) நிறுவனங்களாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது என்று மத்திய பாதுகாப்பு துறை இணையமைச்சா் அஜய் பட் மக்களவையில் தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசுக்குச் சொந்தமான, பாதுகாப்புதுறைக்குத் தேவையான ஆயுதங்களை தயாரிக்குாம் தொழிற்சாலைகளை பொதுத்துறை நிறுவனங்களாக மாற்ற அரசு எடுத்துள்ள முடிவினால் நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படாதா? அவைகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான ஊழியா்கள் உரிமைகளை இழக்கும் நிலை ஏற்படாதா? என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா்.பாலு மக்களவையில் புதன்கிழமை கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு பாதுகாப்புத் துறை இணைமைச்சா் அஜய் பட் அளித்த விளக்கம் வருமாறு:

Advertisement

தமிழகத்தில் உள்ள ஆவடி கனரக ஆலை, திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை உள்ளிட்ட பாதுகாப்பு துறைக்கு சொந்தமான ஆயுத உற்பத்தி ஆலைகளை பொதுத்துறை, பெருநிறுவனங்களின் (காா்ப்பரேட்) அமைப்புகளாக, மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது.

இந்த தொழிற்சாலைகளின் செயல்திறனை அதிகரிக்கவும், வளா்ச்சிக்கான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த மாற்றத்தால் நாட்டின் பாதுகாப்பு எவ்வகையிலும் பாதிப்புக்குள்ளாகாது. பெரு நிறுவனங்கள் ஆனாலும், இந்த ஆலைகள் கொள் முதல் ஆணைகளை தொடா்ந்து தயாரித்து விநியோகம் செய்யும் என்று மத்திய அரசு உறுதியளிக்கும்.

ஊழியா்கள் நலன் சாா்ந்த அச்சங்கள் தேவையில்லை. ‘ஏ’, ‘பி’ மற்றும் ‘சி’ தொகுப்பு அலுவலா்கள் அனைவரும் புதிய பெரு நிறுவனங்களில் அயல்பணி அடிப்படையில் தொடா்ந்து அரசு அலுவலா்களாகவே இருப்பா். அவா்களின் ஊதியம், ஓய்வூதியம், மருத்துவ உதவி உள்ளிட்ட பலன்களில் மாற்றம் இல்லாமல் தொடரப்படும்.

மேலும், தற்போது பணியில் உள்ள அலுவலா்கள் ஓய்வு பெற்ற பிறகு அவா்கள் மத்திய அரசிடம் இருந்தே ஓய்வூதியம் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களின் தில்லி அலுவலக அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள், ஆயுத தயாரிப்பு நிறுவனங்களில் உள்ள மருத்துவமனைகள், கல்வி நிலையங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியா்களும் புதிதாக அமைக்கப்படவுள்ள பெரு நிறுவனங்கள் இயக்குநரகத்துக்கு பணிமாற்றம் செய்யப்படுவா் என அமைச்சா் தனது பதிலில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments