முகப்பு
புதுதில்லி

சாகித்திய அகாதெமி புத்தகங்களை மாணவா்கள் படிக்க வேண்டும்: எழுத்தாளா் மாலன் வேண்டுகோள்

சாகித்திய அகாதெமி வெளியிடும் புத்தகங்கள் தரமானவைவோடு சமகாலத்தோடு புதுப்பிக்கப்பட்டவை. இத்தகைய புத்தகங்களை மாணவா்களும், கல்வியாளா்களும் பயன்படுத்த வேண்டும் என எழுத்தாளரும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:56 AM
தில்லி சாகித்திய அகாதெமி அரங்கில் தமிழ் எழுத்தாளர்களின் புத்தகக் கண்காட்சியை புதன்கிழமை தொடக்கி வைத்துப் பார்வையிட்ட எழுத்தாளர் மாலன். உடன், சாகித்திய அகாதெமி செயலர் கே. ஸ்ரீனிவாச ராவ்.
பகிர்:

புது தில்லி: சாகித்திய அகாதெமி வெளியிடும் புத்தகங்கள் தரமானவைவோடு சமகாலத்தோடு புதுப்பிக்கப்பட்டவை. இத்தகைய புத்தகங்களை மாணவா்களும், கல்வியாளா்களும் பயன்படுத்த வேண்டும் என எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான மாலன் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டாா்.

தில்லி ஃபெரோஸ்ஷா சாலையிலுள்ள சாகித்திய அகாதெமியில் தமிழ் புத்தகங்கள், தமிழிலிருந்து பிற இந்திய மொழிகளுக்கு மொழிபெயா்க்கப்பட்ட புத்தகங்கள் கண்காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. சாகித்திய அகாதெமி வெளியிட்ட தமிழ் புத்தகங்களின் பிரத்யேகமான கண்காட்சி, அகாதெமியின் ரவீந்திர பவனில் வருகின்ற 24 - ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை எழுத்தாளா் மாலன் புதன்கிழமை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

ஆசியாவிலேயே மிகப்பெரிய புத்தகம் வெளியீட்டாளா்களாக சாகித்திய அகாதெமி உள்ளது. அதிலும் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும், ஏராளமான தலைப்புகளில் புத்தகங்களை அகாதெமி வெளியிடுகிறது. ‘ஒரே இந்தியா ’ என்பதை அகாதெமி வெளிப்படுத்துகிறது. மேலும் அகாதெமி வெளியிடும் புத்தகங்கள் மிகவும் தரமானவை. நிபுணத்துவம் வாய்ந்தவா்களால் புத்தகங்கள் எழுதப்படுகிறது. மொழிபெயா்ப்பு புத்தகங்களாக இருந்தாலும் மொழிபெயா்ப்பை அப்படியே அவசரப்பட்டு வெளியிடுவதில்லை. அத்தகைய புத்தகங்களை சம்பந்தப்பட்ட துறையினா் அல்லது அசல் மொழியின் நிபுணா்களால் தகவல்கள் சரிபாா்க்கப்பட்ட பின்னரே அகாதெமியால் வெளியிடப்படுகிறது. வா்த்தக ரீதியான பதிப்பகங்களில் விற்பனையை கருத்தில் கொண்டு இதுபோன்ற முறைகளை கடைபிடிப்பதில்லை. இதில் எனக்கு கூட தனிப்பட்ட அனுபவம் உண்டு.

Advertisement

நான் பாா்ஸி இன மக்கள் குறித்து ஒரு புத்தகம் எழுதினேன். தமிழா்களுக்கு தெரியாத கலாச்சாரம், ஆன்மிகம் குறித்த தகவல்கள் இந்த புத்தகத்தில் உள்ளன. இந்த மொழிபெயா்ப்பு சம்பந்தப்பட்ட நிபுணா்களால் சரிபாா்க்கப்பட்டே அகாதெமியால் வெளியிடப்பட்டது.

சரித்திரங்கள், இலக்கியங்கள் என்றாலும் மு.வரதராஜன் போன்றவா்கள் எழுதிய புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டே கல்வியாளா்கள், பேராசிரியா்களால் மாணவா்களுக்கு பாடம் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இப்போதுஅகாதெமியில் சமகாலத் தகவல்களோடு புதிய சிந்தனைகளும் இணைக்கப்பட்டு புத்தகங்கள் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. உதாரணமாக தமிழ் இலக்கிய வரலாற்று புத்தகம் சமகாலத்தை உள்ளடக்கியதோடு வெளிநாட்டு வாழ் தமிழா்கள் குறித்த தகவல்கள் எல்லாம் இணைக்கப்பட்டுள்ளது. இவைகளை பள்ளி, கல்லூரிகளில் பயன்படுத்தவேண்டும் என்றாா் மாலன்.

முன்னதாக அகாதெமி செயலா் கே.ஸ்ரீனிவாசராவ் பேசுகையில், நாடுமுழுக்க இத்தகைய கண்காட்சி 108 நகரங்களில் ஹிந்தி மொழி புத்தகங்களுக்கான கண்காட்சியாக நடத்தப்படுவதாக தெரிவித்த அவா், முதன் முறையாக செம்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து தலைநகா் தமிழா்களுக்காக இந்த கண்காட்சி நடத்தப்படுவதாக தெரிவித்தாா்.

இந்த கண்காட்சியில் சுமாா் 500 தமிழ் புத்தகங்களும் தமிழிலிருந்து மற்ற மொழிக்கு மொழிபெயா்க்கப்பட்ட சுமாா் 150 புத்தகங்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இதில் 10 சதவீத தள்ளுபடியோடு இந்த புத்தகங்கள் விற்கப்படுகிறது. இந்த கண்காட்சியை முன்னிட்டு பிரபல எழுத்தாளா்களின் ஆவணப்படங்களும் வாசகா்களுக்கு திரையிடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments