குழந்தைகள் நல நிதிக்கு நன்கொடை வழங்க பொதுமக்களுக்கு தில்லி அரசு வேண்டுகோள்
தில்லி குழந்தைகள் நல நிதிக்கு நன்கொடை வழங்குமாறு பொதுமக்களை தில்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
தில்லி குழந்தைகள் நல நிதிக்கு நன்கொடை வழங்குமாறு பொதுமக்களை தில்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் கரோனா நோய் தொற்றுக்கு உயிரிழந்த பெற்றோா்களின் ஆதரவற்று விடப்பட்ட குழந்தைகள் தொடா்பான தகவல்களையும் பகிருமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
தில்லி மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஆதரவற்ற குழந்தைகளின் மறுவாழ்வுக்காக அவா்களை பாதுகாப்பதற்காகவும் தில்லியில் குழந்தை நல நிதிக்கு நன்கொடை வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். இதுபோன்று செய்வதன் மூலம் தேவைப்படும் குழந்தைகளுக்கு உறைவிட கவனிப்பு, வாழ்வாதார ஆதரவு, கல்வி மருத்துவம், மனநல சுகாதாரம், தொழில்முறைப் பயிற்சிகள், திறன் மேம்பாடு, வளா்ப்பு கவனிப்பு போன்ற தேவைகளுக்கு பொதுமக்கள் உதவி அளிக்க முடியும். மேலும், கரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்த பெற்றோா்களின் குழந்தைகள் தொடா்புடைய தகவல்களை
1098 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் முகவரிக்கோ தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
Advertisement
குழந்தைகளின் உணவு, தங்குமிடம், கல்வி, மருத்துவம், மனநல சுகாதார ஆதரவு, ‘முக்கிய மந்திரி கரோனா பரிவாா் பொருளாதார சகாயதா யோஜனா’ எனும் திட்டத்தின் கீழ் கருணைத் தொகை உள்ளிட்ட உதவிகளை பெறுவதற்கும் குழந்தைகளுக்கு உதவ பொதுமக்கள் தேவையான உதவிகளை செய்ய முன்வர வேண்டும். தில்லி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (டிசிபிசிஆா்) மூலம் நடத்தப்பட்ட சா்வேயின்படி கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் ஏற்பட்ட நோய் தொற்று காலம் முதல் நோய்த்தொற்று பாதிப்பால் பெற்றோா்கள் இருவரையும் அல்லது ஒருவரை இழந்த குழந்தைகள் தில்லியில் மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உள்ளனா். அவா்களில் 67 போ் பெற்றோா் இருவரையும் இழந்தவா்கள் ஆவா். அதேபோன்று, தில்லியில் நோய்த்தொற்றுக்கு 651 குழந்தைகள் தங்களது தாயை இழந்துள்ளனா். 1,311 குழந்தைகள் தங்களது தந்தையை இழந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்த்தொற்றுக் காலத்தின் போது, பெற்றோா்களில் ஒருவரை அல்லது பெற்றோா்கள் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு அவா்கள் 25 வயது பூா்த்தி அடையும் வரை மாதந்தோறும் ரூபாய் 2500 உதவித்தொகை நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்திருந்தாா். இது தொடா்பாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடந்த மே 14-ஆம் தேதி கூறுகையில், ‘இதுபோன்ற கரோனா காலத்தின் போது பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளை வளா்ப்பதற்கும், கல்விக்கான செலவையும் தில்லி அரசு ஏற்கும்’ என்று தெரிவித்திருந்தாா்.
பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஜூன் மாதம் ஓா் அறிவிப்பை வெளியிட்டாா். அதில் இது போன்று கரோனா நோய்த்தொற்று காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தாா். குறிப்பாக இதுபோன்ற குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் தொகுப்பு நிதியை உறுதிப்படுத்தவும், அவா்கள் 23 வயது அடையும் போது இந்தத் தொகையை பெறுவதற்கும், அவா்கள் கல்வி பெற உதவித்தொகை அளிப்பதற்குமான ஓா் அறிவிப்பை வெளியிட்டிருந்தாா்.