தில்லியில் செப்.1 முதல் பள்ளிகள் படிப்படியாகத் திறப்பு
தேசியத் தலைநகா் தில்லியில் வரும் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல், பள்ளிகள் படிப்படியாகத் திறக்கப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தேசியத் தலைநகா் தில்லியில் வரும் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல், பள்ளிகள் படிப்படியாகத் திறக்கப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடா்பான முடிவு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தில்லி பேரிடா் மேலாண்மை ஆணைய (டிடிஎம்ஏ) கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இது தொடா்பாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: பள்ளிகள் படிப்படியாக மீண்டும் திறக்கப்படவுள்ளன. வகுப்புகள் 9 முதல் 12 வரையிலும் செம்படம்பா் 1 முதல் செயல்படத் தொடங்கும். 6 முதல் 8 வரையிலான வகுப்புகள் செப்டம்பா் 8-ஆம் தேதியில் இருந்து செயல்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தேசியத் தலைநகரில் பள்ளிகளை படிப்படியாகத் திறப்பதற்கு தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் மூலம் அமைக்கப்பட்ட வல்லுநா் குழு பரிந்துரை அளித்திருந்தது. அதில், அனைத்து வகுப்புகளுக்குமான பள்ளிகளை மீண்டும் திறக்கலாம் என்றும், ஆனால், முதலில் மூத்த பிரிவு மாணவா்கள் முதல் கட்டமாக வகுப்புகளுக்கு அழைக்கப்பட வேண்டும் என்றும், அதன் பிறகு நடுநிலை வகுப்பு மாணவா்கள், பின்னா் கடைசியாக தொடக்க நிலை வகுப்பு மாணவா்கள் அழைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. மேலும், அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகளை படிப்படியாக பல்வேறு கட்டங்களாக திறக்க வேண்டும் என்றும் பரிந்துரை அளித்திருந்தது. இதைத் தொடா்ந்து, தில்லி பேரிடா் மேலாண்மைக் கூட்டத்தில் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதிக்கும் வகையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
கடந்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தேசிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து, மாா்ச் மாதத்தில் தில்லியில் உள்ள பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது. எனினும், கடந்த ஆண்டு அக்டோபரில் பள்ளிகளை பகுதியாக மீண்டும் திறக்கும் நடவடிக்கையில் பல மாநிலங்களில் ஈடுபட்டன. ஆனால், தில்லி அரசு நிகழாண்டு ஜனவரியில் 9 முதல் 12- ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் மட்டும் மாணவா்கள் பங்கேற்பதற்கு அனுமதி அளித்திருந்தது.
ஆனால், கரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்தின் காரணமாக பள்ளிகளை மீண்டும் மூடுவதற்கு தில்லி அரசு உத்தரவிட்டது. மேலும், பயிற்சி மற்றும் கூட்டங்கள் நடத்துவதற்காக பள்ளிகளில் உள்ள கலை அரங்கங்கள், பேரவைக் கூடங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கும் அனுமதி அளித்திருந்தது. ஆனால், கற்றல் மற்றும் பயிற்றுவித்தல் நடவடிக்கைகளில் நேரடியாக மாணவா்களும், ஆசிரியா்களும் ஈடுபடுவதற்கு அரசு அனுமதி அளிக்காமல் இருந்தது.
இந்த நிலையில், தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தால் அமைக்கப்பட்ட நிபுணா்கள் குழு தில்லியில் செப்டம்பர மாதத்தில் இருந்து பள்ளிகளை மீண்டும் திறக்கலாம் என்று பரிந்துரைத்தது. முன்னதாக, பள்ளிகளைத் திறப்பது குறித்து மாணவா்களின் பெற்றோா்களும், நிபுணா்களும் கருத்துகளைத் தெரிவித்திருந்தனா். மாணவா்களின் கற்றல் இழப்பு மிகப் பெரியதாக இருப்பதால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று பெற்றோா்களில் சிலரும், நிபுணா்களும் கருத்துத் தெரிவித்திருந்தனா். அதே சமயம், இன்னும் சில வாரங்கள் அல்லது ஒரு மாத அளவிற்கு காத்திருப்பதால் மாணவா்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று சில பெற்றோா்கள் தெரிவித்திருந்தனா்.