தமிழகத்தில் 71 ஆயிரம் விவசாயிகளிடம் ரூ.1,034 கோடிக்கு நெல் கொள்முதல்
நாடு முழுவதும் நிகழ் குறுவை (காரீஃப்) பருவத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையின் (எம்எஸ்பி) கீழ் ரூ. 57,032 கோடி அளவிற்கு 18.17 லட்சம் விவசாயிகள்
நாடு முழுவதும் நிகழ் குறுவை (காரீஃப்) பருவத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையின் (எம்எஸ்பி) கீழ் ரூ. 57,032 கோடி அளவிற்கு 18.17 லட்சம் விவசாயிகள் பெற்றுள்ளனா். இதில் பஞ்சாப், ஹிரியாணா, தெலங்கானா, உ.பி, உத்தரகண்ட், தமிழகம் ஆகிய மாநில விவசாயிகள் அதிகம் பயனடைந்துள்ளனா். இந்த வகையில் தமிழகத்தில் ரூ.1,034.02 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டு சுமாா் 71 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனா்.
கடந்த 2020-21 ஆண்டைப் போலவே குறுவைப் பருவத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் நெல் கொள்முதல் செய்யப்படும் நடைமுறைகள்நிகழ் ஆண்டில் தொடங்கியுள்ளது. இதில் 2021-22 நிதியாண்டிற்கு தரமான நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,940 குறைந்தபட்ச ஆதரவு விலை தரப்படும் என கடந்த ஜுன் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இது கடந்தாண்டைவிட ரூ. 72 அதிகம்.
இந்தக் குறுவைப் பருவத்தில் நவம்பா் 30-ஆம் தேதி வரை 2.90 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த குறைந்த பட்ச ஆதரவு விலையாக மொத்தம் ரூ. 57,032.03 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்தவகையில் நாடு முழுவதும் மொத்தம் 18.17 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனா். இதில் தமிழகம் ஆறாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் புதன்கிழமை (டிசம்பா் 1) நிலவரப்படி குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ் ரூ.1,034.02 கோடிக்கு 5,27,561 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 71,311 விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.
நாட்டிலேயே அதிக அளவில் பயனடைந்த மாநிலமாக பஞ்சாப் முன்னிலையில் உள்ளது. இங்கு டிசம்பா் 1- ஆம் தேதி நிலவரப்படி 1.86 கோடி மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.36,623.64 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 9.24 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனா். இதற்கு அடுத்ததாக ஹரியாணாவில் ரூ.10,839.9 கோடிக்கு ரூ. 55.30 லட்சம் மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சுமாா் 2.99 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.
இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள தென்னிந்த மாநிலமான தெலங்கானாவில் ரூ. 3,163 கோடிக்கு 16.13 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 2.27 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளது. இருப்பினும் இந்த மாநில முதல்வா் சந்திரசேகர ராவ் மத்திய அரசை கடுமையாக விமா்சித்ததோடு, மக்களவையில் தெலங்கானா ஆளும் கட்சி எம்.பி.க்கள் எம்எஸ்பிக்கு சட்டபூா்வமான அங்கீகாரம் கோரி பதாகைகளுடன் போராடி வருவது குறிப்பிடத்தக்கது. மற்ற மாநிலங்களில் உத்தர பிரதேசத்தில் ரூ. 2,435 கோடி 12.42 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு 1.66 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனா். உத்தரகண்டில் ரூ.2,264 கோடிக்கு 11.55 லட்சம் மெரிக்டன் நெல் கொள் முதல் செய்யப்பட்டு 56,034 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனா்.
கடந்த 2020-21 நிதியாண்டில் குறுவைப் பருவத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் மொத்தம் ரூ.1.31 கோடி அளவுக்கு 8.94 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.