டேட்டிங் செயலிகள் பயன்படுத்தும் 40 லட்சம் பேர்! திருமணம் மீறிய உறவுகளும் அதிகரிப்பு
இந்தியாவில் திருமணம் மீறிய உறவுகள் கணிசமாக அதிகரித்திருப்பதாக ஆய்வில் தகவல்
இந்தியாவில் திருமணம் மீறிய உறவுகள் கணிசமாக அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், டேட்டிங் செயலிகளின் பயன்பாடு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. அதிலும் திருமணம் மீறிய உறவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆய்வு கூறுகிறது.
சமீபத்திய ஆய்வுகளின்படி, டேட்டிங் செயலிகளை சுமார் 40 லட்சம் பேர் பயன்படுத்துவதாகக் கூறுகிறது. அவர்களில் 65 சதவிகிதம் ஆண்களும், 35 சதவிகிதம் பெண்களும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் திருமணமானவர்களே. மேலும், பெண்களின் பங்களிப்பு, கடந்த 2 ஆண்டுகளில் கணிசமாக 148 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
சராசரியாக டேட்டிங் செயலிகளில் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் முதல் 1.5 மணிநேரம் வரையில் பயனர்கள் அரட்டையடிக்கின்றனர். குறிப்பாக, மதியம் 12 மணிமுதல் 3 மணிவரையிலும், இரவு 10 மணிமுதல் நள்ளிரவு வரையிலும் செயலியின் பயன்பாடு உச்சத்தை அடைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் ஆண்கள் - 25 முதல் 30 வயதுடைய பெண்களை நாட முயல்வதாகவும், பெண்கள் - 30 முதல் 40 வயதுக்குள்பட்ட ஆண்களை (குறிப்பாக மருத்துவர்கள், பட்டயக் கணக்காளர்கள் போன்ற பொருளாதார ரீதியாக தொழில் வல்லுநர்கள்) விரும்புகிறார்கள்.
டேட்டிங் செயலி பயன்பாட்டில் 18 சதவிகித பயனர்களுடன் பெங்களூரு முதலிடமும், 17 சதவிகித பயனர்களுடன் ஹைதராபாத் இரண்டாமிடமும், தில்லியில் 11 சதவிகிதமும், மும்பையில் 9 சதவிகிதமும், புணேயில் 7 சதவிகிதமும் உள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.
கடந்தாண்டு ஜூன் மாதத்தின் தரவுகளின்படி, திருமணம் மீறிய உறவுகள் இருந்தோரில் தமிழகத்தின் காஞ்சிபுரத்திலும் அதிகளவில் இருந்ததாக ஆய்வுகள் கூறின.