பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்குத்தான் அதிகாரம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
புது தில்லி: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுவிக்கக் கோரும் விவகாரத்தை குடியரசுத் தலைவா்தான் கையாள முடியும் என்று தமிழக ஆளுநா் தெரிவித்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வியாழக்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு கடந்த ஜனவரி 21-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ‘இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநா் ஒரு வாரத்தில் முடிவு எடுக்க உள்ளாா்’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா தெரிவித்திருந்தாா். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் துணைச் செயலா் முகம்மது நசீம் கான் தரப்பில் வியாழக்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்த விவகாரத்தில் தொடா்புடைய ஆவணங்களையும் தமிழக ஆளுநா் பரிசீலித்தாா். இதையடுத்து, ஜனவரி 25-ஆம் தேதியிட்ட அவரது உத்தரவில் சம்பந்தப்பட்ட தண்டனைக் குறைப்பு விவகாரத்தைக் கையாளும் உரிய அதிகார அமைப்பு இந்தியக் குடியரசுத் தலைவா்தான் எனப் பதிவு செய்துள்ளாா். மத்திய அரசால் பெறப்பட்டுள்ள இந்த முன்மொழிவு குறித்து சட்டப்படி பரிசீலிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்த வழக்கு பிப்ரவரி 9-ஆம் தேதி உச்சநீதிமன்ற விசாரணைக்கு வரக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி 1991, மே 21-இல் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டாா். இந்த விவகாரத்தில் பேரறிவாளன் உள்பட 7 போ் சுமாா் 30 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.