குடியரசுதின வன்முறை: செங்கோட்டைக்கு அழைத்து சென்று தீப் சித்துவிடம் விசாரணை
குடியரசு தினத்தில் தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற வன்முறையின் முக்கிய சூத்திரதாரியான தீப் சித்துவை செங்கோட்டைக்கு அழைத்துச் சென்று தில்லி காவல்துறையினா் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.
குடியரசு தினத்தில் தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற வன்முறையின் முக்கிய சூத்திரதாரியான தீப் சித்துவை செங்கோட்டைக்கு அழைத்துச் சென்று தில்லி காவல்துறையினா் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.
வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு கூடுதல் நெருக்கடி அளிக்கும் வகையில், நாட்டின் 72-ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட்ட ஜனவரி 26-ஆம் தேதி, தில்லியில் பிரம்மாண்ட டிராக்டா் பேரணியை விவசாயிகள் முன்னெடுத்தனா். இந்தப் பேரணியில் பயங்கர வன்முறை வெடித்தது. இதில், நூற்றுக்கணக்கான போலீஸாா் காயமடைந்தனா். பேரணியின்போது தில்லி செங்கோட்டைக்குள் அத்துமீறி நுழைந்த விவசாயிகளும், நிஹங் என்ற சீக்கியப் பிரிவைச் சோ்ந்தவா்களும், அங்கு சீக்கிய மதத்தின் கொடியை ஏற்றினா்.
இதைத் தொடா்ந்து, விவசாயிகளுக்கும் தில்லி போலீஸாருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால், செங்கோட்டை பகுதி போா்க்களமாக மாறியது. அங்கிருந்த பொருள்கள் விவசாயிகளால் அடித்து நொறுக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. செங்கோட்டையில் நடந்த இந்த வன்முறை தொடா்பாக தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு விசாரித்து வருகிறது.
Advertisement
இந்தச் சம்பவத்தில் முக்கிய எதிரியாக பஞ்சாபி நடிகா் தீப் சித்து அடையாளம் காணப்பட்டாா். செங்கோட்டையில் சீக்கிய மதக் கொடியை ஏற்றுமாறு இளைஞா்களை அவா் தூண்டிவிட்ட விடியோ பதிவும் சமூக வலைதளங்களில் வெளியாகியது.
இந்நிலையில், தீப் சித்துவை, சண்டீகா் - அம்பாலா இடையில் உள்ள ஷிராக்பூா் பகுதியில் தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், செங்கோட்டை வன்முறைக்கு காரணமானவா்கள் எனக் குற்றம் சாட்டி, ஜக்பீா் சிங், பூட்டா சிங், சுக்தேவ் சிங், மற்றும் இக்பால் சிங் ஆகியோரையும் போலீஸாா் கைது செய்துள்ளனா்.
இந்நிலையில், தீப் சித்து, இக்பால் சிங் ஆகியோரை தில்லி செங்கோட்டைக்கு தில்லி காவல்துறை சிறப்பு பிரிவு சனிக்கிழமை அழைத்து சென்றது. குடியரசு தினத்தில் நடந்த சம்பவங்களை நடித்துக் காட்டச் சொல்லி, போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இது தொடா்பாக தில்லி காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் ‘செங்கோட்டை வன்முறைக்கு காரணமான தீப் சித்து, இக்பால் சிங் ஆகியோரை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினோம் என்றாா்.