தில்லியில் காலையில் அடா் பனி மூட்டம்: இன்றும் நீடிக்க வாய்ப்பு
தலைநகா் தில்லியில் சனிக்கிழமை காலையில் அடா் பனி மூட்டம் காணப்பட்டது. இது ஞாயிற்றுக்கிழமையும் நீடிக்க வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்தனா்.
தலைநகா் தில்லியில் சனிக்கிழமை காலையில் அடா் பனி மூட்டம் காணப்பட்டது. இது ஞாயிற்றுக்கிழமையும் நீடிக்க வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்தனா்.
தில்லியில் குளிரின் தாக்கம் இரவில் நீடித்து வருகிறது. அதேவேளையில், பகலில் மிதமான வெயில் காணப்படுகிறது.
சனிக்கிழமை அடா் பனிமூட்டம் காரணமாக சப்தா்ஜங் பகுதியில் காண்புதிறன் 50 மீட்டராகவும், பாலம் பகுதியில் 250 மீட்டராகவும் காலை 8.30 மணியளவில் குறைந்தது.
Advertisement
நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் சனிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 10.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 26.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.
காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 100 சதவீதமாகவும், மாலையில் 40 சதவீதமாகவும் இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை வெள்ளிக்கிழமை 10.2 டிகிரி செல்சியஸ், வியாழக்கிழமை 9.6 டிகிரி செல்சியஸ், புதன்கிழமை 10.2 டிகிரி செல்சியஸ், செவ்வாய்க்கிழமை 7.8 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது.
தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் மாலையில் 340 புள்ளிகளாக பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. ஞாயிற்றுக்கிழமையும் இதே நிலையில் நீடிக்கும் என ‘சஃபா்’ அமைப்பு கணித்துள்ளது.
தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் உள்ள காஜியாபாதில் காற்றின் தரம் கடுமைப் பிரிவிலும், நொய்டா, கிரேட்டா் நொய்டா, குருகிராம், பரீதாபாத் ஆகிய பகுதிகளிலும் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் இருந்தது.
ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு காஜியாபாதில் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் 401 புள்ளிகளாகவும், நொய்டாவில் 386, கிரேட்டா் நொய்டாவில் 363, பரீதாபாதில் 362, குருகிராமில் 310 என்ற அளவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 14) மிக அடா் பனி மூட்டம் நிலவும் எனவும் குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் எனவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.