5 மாநிலங்களில் இருந்து தில்லிக்கு வருபவர்களுக்கு கரோனா சான்றிதழ் கட்டாயம்?
கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் மாநிலங்களிலிருந்து பல்வேறு மாா்க்கங்களில் தேசிய தலைநகருக்கு பயணிப்பவா்கள் உரிய பரிசோதனை சான்றிதழுடன் வருமாறு தில்லி அரசு அறிவுத்தியுள்ளது.
புது தில்லி: பஞ்சாப், மத்திய பிரதேசம், கேரளம், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் இருந்து தில்லிக்கு வருபவர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை கட்டாயப்படுத்த தில்லி அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளிக்கிழமை (பிப்.26) முதல் இந்தக் கட்டுப்பாட்டை தில்லி அரசு அதிகாரபூர்வமாக அமல்படுத்த இருக்கிறது.
தில்லி அரசின் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது கரோனா குறித்த விவாதத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கட்டுப்பாட்டை வரும் மார்ச் 15}ஆம் தேதி வரை தில்லி அரசு அமல்படுத்த இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
இந்த 5 மாநிலங்களில் இருந்து விமானங்கள், ரயில்கள், பேருந்துகள் போன்றவை வழியாக பயணித்து வருபவர்கள் தில்லிக்குள் நுழைவதற்கு முன்பு கரோனா பரிசோதனைச் சான்றிதழ் அறிக்கையை தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த சான்றிதழ் சோதனைக்குப் பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவித்தனர்.
கரோனா தொற்று குறித்து மத்திய சுகாதாரத் துறை அதிகாரி தெரிவிக்கையில், "மகாராஷ்டிரத்தில் தொற்றின் தினசரி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கேரளத்தில் தொற்று அதிகரிப்பில் சரிவைக் காட்டுகிறது, என்றாலும் முழுமையான எண்ணிக்கையில் தொற்று இன்னும் அதிகமாக உள்ளன. பஞ்சாபில், நாள்தோறும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதும் கவலைக்குரியதாக இருக்கிறது.
சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொற்று தினசரி அதிகரித்து வருகிறது' என மத்திய அரசின் அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை புதிதாக 145 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை 2 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 10,903 பேர் தில்லியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 6,38,173 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.