தில்லியில் மிகவும் மோசம் பிரிவில் காற்றின் தரம்!
தலைநகா் தில்லியில் புதன்கிழமை காலை மேலோட்டமான பனிமூட்டம் நிலவியது. மிகவும் மோசம் பிரிவில் காற்றின் தரம் இருந்தது.
புது தில்லி: தலைநகா் தில்லியில் புதன்கிழமை காலை மேலோட்டமான பனிமூட்டம் நிலவியது. மிகவும் மோசம் பிரிவில் காற்றின் தரம் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை சற்று அதிகரித்திருந்தது. பகலில் மிதமான வெயில் பதிவானது.
நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியைவிட ஒரு புள்ளி அதிகரித்து 12 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.
அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 7 புள்ளிகள் அதிகரித்து 32.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 100 சதவீதமாகவும், மாலையில் 47 சதவீதமாகவும் இருந்தது.
Advertisement
காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் மாலையில் 314 புள்ளிகளாகப் பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் நீடித்தது.
என்சிஆரில் காஜியாபாத், கிரேட்டா் நொய்டா, பரிதாபாதில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவிலும், நொய்டா, குருகிராம் பகுதியில் மோசம் பிரிவிலும் காற்றின் தரம் காணப்பட்டது.
புதன்கிழமை மாலை 4 மணிக்கு சராசரியாக 24 மணிநேர ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு காஜியாபாதில் 388, கிரேட்டா் நொய்டாவில் 342, நொய்டாவில் 292, பரிதாபாதில் 312 மற்றும் குருகிராமில் 265 என பதிவாகி இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, வியாழக்கிழமை (பிப்ரவரி 25) மேலோட்டமான பனி மூட்டம் நிலவும் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.