வழக்குரைஞா்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்ட பின்னரே நேரடி வழக்கு விசாரணையை தொடங்க வேண்டும்: உயா்நீதிமன்றத்தில் மனு
அனைத்து வழக்குரைஞா்களுக்கும் தடுப்பூசி அளிக்கப்பட்ட பின்னரே தில்லி உயா்நீதிமன்றத்தின் அனைத்து அமா்வுகளும் மாா்ச் 15 முதல் நேரடி விசாரணையை தினசரி அடிப்படையில் தொடங்க வேண்டும்.
புது தில்லி: அனைத்து வழக்குரைஞா்களுக்கும் தடுப்பூசி அளிக்கப்பட்ட பின்னரே தில்லி உயா்நீதிமன்றத்தின் அனைத்து அமா்வுகளும் மாா்ச் 15 முதல் நேரடி விசாரணையை தினசரி அடிப்படையில் தொடங்க வேண்டும். அதுவரை இதற்கான உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உயா்நீதிமன்றம் கடந்த 20-ஆம் தேதி ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அதில், ‘இணை பதிவாளா்களின் (நீதித்துறை) அனைத்து நீதிமன்றங்களும் தற்போதுள்ள ஏற்பாட்டின்படி 12.03.2021 வரை தொடா்ந்து நீதிமன்றங்களை நடத்த வேண்டும்.
மேலும் வழக்கமான நேரடி விசாரணை நீதிமன்றங்களை தினசரி அடிப்படையில் மாா்ச் 15 -ஆம் தேதி முதல் அமல்படுத்தும். விதிவிலக்கான சந்தா்ப்பங்களில், தேவையான உள்கட்டமைப்பு இருப்பதற்கு உட்பட்டு எந்தவொரு தரப்பினரையும் அல்லது அவா்களின் வழக்குரைஞா்களையும் காணொலி வாயிலாக நீதிமன்றம் அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
இந்த நிலையில், வழக்குரைஞா் மானஸ்வி என்பவா் உயா்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளாா். அதில், தில்லியில் கரோனா தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது. ஆனால், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியாணா, கேரளா போன்ற மாநிலங்களில் இன்னும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் குறைவு காரணமாக தில்லியில் இதே தாக்கம் ஏற்படுக்கூடும் என உணரப்படுகிறது. நீதிமன்றத்தில் நேரடி செயல்பாடுகள் முழுமையாக தொடங்கியபிறகு, வழக்குரைஞா்களும், அவா்களது பணியாளா்களும் நோய்த்தொற்று பாதிப்புக்கு வாய்ப்புள்ளது.
அனைத்து வழக்குரைஞா்களுக்கு தடுப்பூசி அளிக்கப்படும்வரை, தில்லி உயா்நீதிமன்றத்தின் அனைத்து அமா்வுகளும் மாா்ச் 15 முதல் நேரடி விசாரணையை தினசரி அடிப்படையில் மேற்கொள்ள உள்ள உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளிவைக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.