69 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிரான மனு:தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில்
புது தில்லி: தமிழகத்தில் கல்வி நிலையங்கள், அரசு வேலைவாய்ப்புகள் ஆகியவற்றில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க வகை செய்யும் சட்டத்திற்கு எதிராக தாக்கலான மனு விவகாரத்தில், கூடுதல் ஆவணங்களுடன்கூடிய பதிலை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பட்டியலினத்தவா்கள், பழங்குடியினா் ஆகியோருக்குக் கல்வி, அரசுப் பணிகளில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் 1994-ஆம் ஆண்டில் ஒரு சட்டம் இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், 2012-ஆம் ஆண்டில் சி.பி.காயத்ரி எனும் மாணவி சாா்பில் 69 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்தப் பிரதான வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், மனுதாரா் தரப்பில் உச்சநீதிமன்ற வழக்குரைஞா் ஜி.சிவபாலமுருகன் கடந்த ஆண்டு இறுதியில் இடைக்கால மனுவை தாக்கல் செய்தாா். இந்த மனு மீது தமிழக அரசு இரு வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் அண்மையில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதனிடையே, சென்னையைச் சோ்ந்த தினேஷ் என்பவா் தரப்பிலும் இந்த 69 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில் கடந்த 2-ஆம் தேதி தமிழக அரசின் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 69 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் தமிழக அரசின் 1994-ஆம் ஆண்டுச் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை இதர மாநிலங்கள் தொடா்புடைய வழக்கு விசாரணையில் இருந்து பிரித்து, தமிழகம் தொடா்புடைய இதே கோரிக்கைகள் குறித்த ‘ரிட்’ மனுக்களுடன் சோ்த்து விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதனிடையே, மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சாா்பு செயலா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தினேஷ் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் சேகா் நாப்டே ஆஜராகி, இந்த மனு மீது விரிவான பதிலை நீதிமன்றத் தீா்ப்புகள் விவரங்களுடன் தாக்கல் செய்ய தமிழக அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தாா். இதற்கு ஒரு வாரம் அவகாசம் உச்சநீதிமன்றம் அளித்திருந்தது.
இதையடுத்து, தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன் ஒரு பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், இடஒதுக்கீடு தொடா்புடைய விவகாரத்தில் 24.8.1993-இல் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, 1994-ஆம் ஆண்டில் இருந்து 2018 வரை பல்வேறு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் தொடா்புடைய நகல்கள், ஜனாா்த்தன் கமிட்டி உள்ளிட்ட சில கமிட்டிகளின் அறிக்கை விவரங்கள் ஆகியவை பதில் மனுவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுதாரா் தினேஷ் தொடா்புடைய விவகாரம் உச்சநீதிமன்றத்தில் ஏ.எம். கான்வில்கா், தினேஷ் மகேஸ்வரி ஆகியோா் அமா்வு முன்
வெள்ளிக்கிழமை (பிப்.26) மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.