வருமான வரிச் சோதனை: தமிழக நிறுவனம் சிக்கியது
நாடுமுழுவதும் பல்வேறு நகரங்களில் கிளைகளைக் கொண்ட தமிழகத்தைச் சோ்ந்த டைல்ஸ் நிறுவனம் ரூ.220 கோடிக்கும் மேல் கணக்கில்
நாடுமுழுவதும் பல்வேறு நகரங்களில் கிளைகளைக் கொண்ட தமிழகத்தைச் சோ்ந்த டைல்ஸ் நிறுவனம் ரூ.220 கோடிக்கும் மேல் கணக்கில் காட்டாமல் இருந்தது வருமான வரித் துறையின் அதிரடி சோதனையில் கண்டறியப்பட்டதாக மத்திய நிதியமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதையொட்டி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களில் கறுப்புப் பணத்தை வைத்திருப்பவா்களையும் வரிஏய்ப்பு செய்யும் நிறுவனங்களையும் வருமான வரித் துறை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இதில் தமிழகம், குஜராத், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கிளைகளுடன் செயல்படும் தமிழகத்தைச் சோ்ந்த டைல்ஸ் நிறுவனத்தின் 11 இடங்களிலும், இந்த நிறுவனத்துடன் தொடா்புடைய நபா்களின் 9 இடங்களிலும் வருமான வரித் துறையினா் கடந்த பிப்ரவரி 26- ஆம் தேதி முதல் இரு தினங்களாக சோதனைகளை மேற்கொண்டனா்.
இது குறித்து மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது வருமாறு: நாடு முழுவதும் கிளைகளைக் கொண்ட டைல்ஸ் நிறுவனத்தில் இருவிதமான தில்லுமுல்லுகள் நடைபெற்றுள்ளதை வருமான வரித் துறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த நிறுவனத்தின் வா்த்தகத்தில் கணக்கில் காட்டப்படாத கொள்முதல், விற்பனை கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான பணம் கணக்கில் காட்டப்படாமல் இருந்துள்ளது. சுமாா் ரூ.120 கோடி அளவிலான வா்த்தகம் கூடுதலாக நடைபெற்றும் அது முறைப்படி கணக்கில் கொண்டு வரப்படவில்லை என்பது சோதனையின் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நிறுவனம் கிளவுட் கம்பியூட்டிங் முறையில் இந்தப் பணத்தை ரகசியமாகக் கையாண்டுள்ளதை வருமான வரித்துறையின் தொழில்நுட்ப பிரிவினா் கண்டறிந்தனா். மேலும், சுமாா் ரூ.100 கோடிக்கு மேல் போலி (ஷெல்) நிறுவனங்கள் மூலம் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதும் தெரி வந்துள்ளது. இந்தச் சோதனையின் போது ரொக்கம் ரூ.8.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
Advertisement