அமெரிக்காவுக்கு எதிரான போரில் வரலாற்று வெற்றி! - ஈரான்
அமெரிக்காவுக்கு எதிரான போரில் வரலாற்று வெற்றி பெற்றுள்ளதாக ஈரான் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளதைப் பற்றி...
அமெரிக்காவுக்கு எதிரான போரில் வரலாற்று வெற்றி பெற்றுள்ளதாக ஈரான் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அணுஆயுதக் கொள்கையைக் கைவிடக் கோரி, ஜெனீவாவில் நடைபெற்ற ஈரான் - அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், கடந்த பிப். 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவங்கள் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலில் உச்சத்தலைவரும், ஈரானின் மதகுருவுமான அலி அயத்துல்லா கமேனி, அவரது குடும்பத்தினர், ராணுவ உயரதிகாரிகள் 50 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் வளைகுடா நாடுகள் மீதும், இஸ்ரேல் மீது ஈரான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
Advertisement
5-வது வாரமாக போர் தொடர்ந்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் கடும் தாக்குதல் நடத்தப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்த நிலையில், பாலங்கள், எரிசக்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள் உள்ளிட்டவை மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நேற்றிரவு (ஏப். 9), ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காத ஈரான் மீது கடும் கோபத்துடன் பதிவிட்டிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இன்றிரவு ஒரு நாகரிகமே அழியப்போகிறது என்றும் மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி அசிம் முனீர் ஆகியோருடனான பேச்சு அடிப்படையில், ஈரான் மீதான தாக்குதலுக்கு அனுப்பப்படவிருந்த படைகளை நிறுத்த வேண்டும் என்றும், இஸ்லாமிய குடியரசான ஈரான், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஒப்புக்கொண்டதால், ஈரான் மீதான தாக்குதலை இரண்டு வாரங்களுக்கு நிறுத்திவைக்க நான் ஒப்புக்கொள்கிறேன்.
இது இரு தரப்பிலுமான போர் நிறுத்தமாக இருக்கும். இதனைச் செய்வதற்கான காரணம் என்னவென்றால், நாங்கள் ஏற்கெனவே ஈரானுடனான நீண்டகால அமைதி மற்றும் மத்திய கிழக்கில் அமைதி தொடர்பான ஓர் உறுதியான ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் கிட்டத்தட்ட முன்னேறிவிட்டோம். மேலும், ஈரானிடமிருந்து 10 அம்ச முன்மொழிவைப் பெற்றுள்ளோம்” எனத் தெரிவித்து போரை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார் டிரம்ப்.
இந்த நிலையில், போர் நிறுத்தத்தை ஈரானுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி என ஈரான் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரான் வரலாற்று வெற்றியைப் பெற்றிருக்கிறது. குற்றம்புரிந்த அமெரிக்காவை தனது 10 அம்சத்திட்டங்களுக்கு அடிபணியவும் வைத்திருக்கிறது. இன்னும் போர் முடியவில்லை.
வரிகளை நீக்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க... ஈரானுடன் 2 வாரங்களுக்கு போர்நிறுத்தம்: டிரம்ப் திடீர் அறிவிப்பு