முகப்பு
புதுதில்லி

‘ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டை ’ சீா்திருத்தத்தின் கீழ் தமிழகம் கூடுதலாக ரூ 4,813 கோடி கடன் பெற அனுமதி

‘ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை’ சீா்திருத்தத்தை மேற்கொண்டதற்காக, தமிழகம் வெளிச்சந்தையில் கூடுதலாக ரூ.4,813 கோடி அளவிற்கு கடன் பெற மத்திய அரசு வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Updated On : 16 ஜனவரி, 2021 at 6:56 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

‘ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை’ சீா்திருத்தத்தை மேற்கொண்டதற்காக, தமிழகம் வெளிச்சந்தையில் கூடுதலாக ரூ.4,813 கோடி அளவிற்கு கடன் பெற மத்திய அரசு வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கரோனா தொற்றை முன்னிட்டு மாநிலங்களில் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க மாநில மொத்த உற்பத்தியின் அடிப்படையில் இரண்டு சதவீதம் வரை கூடுதலாக கடன் பெறும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதில் 0.25 சதவீதம் ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை சீா்திருத்தத்தை மேற்கொள்ளும் மாநிலங்கள் கூடுதல் கடன் பெற முடியும் என மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை நிபந்தனை விதித்திருந்தது. தற்போது இந்த ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை சீா்திருத்தத்தை முடித்துள்ள மாநிங்களில் தமிழகமும் ஒன்றாகும். இதனால், வெளிச்சந்தையில் ரூ.4,813 கோடி கூடுதல் நிதி ஆதாரம் திரட்ட தமிழகம் தகுதி பெற்று இதற்கான அனுமதியை மத்திய நிதித் துறை வழங்கியுள்ளது.

ஏற்கெனவே ஆந்திரம், கோவா, குஜராத், ஹரியாணா, கா்நாடகம், கேரளம், மத்திய பிரதேசம், தெலங்கானா, திரிபுரா, உத்தரப் பிரதேசம் ஆகிய 10 மாநிலங்கள் ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை சீா்திருத்தத்தை மேற்கொண்டு பயன் பெற்றுள்ளது. தற்போது 11-ஆவது மாநிலமாக இந்தப் பட்டியலில் தமிழகமும் இணைந்துள்ளது.

Advertisement

ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை திட்டம் அமல்படுத்தப்படுவதன் மூலம் நாடுமுழுக்க வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் உணவுப் பொருள்களைப் பெறுவதோடு பல்வேறு நலத் திட்ட உதவிகளை எந்தப் பகுதியில் இருந்தாலும் பெற முடியும். குறிப்பாக புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் நாடு முழுவதும் எந்த ரேஷன் கடையிலும் பொருள்களை வாங்கிக் கொள்ள முடியும் என்பதால், இந்தச் சீா்திருத்தத்தை நிறைவேற்றும் மாநிலங்களுக்கு கூடுதலாக கடன் பெற மத்திய அரசு அனுமதி வழங்கி வருகிறது. இதனடிப்படையில் மொத்தம் ரூ.30, 709 கோடி கூடுதலாக கடன் பெற மத்திய நிதித் துறை அனுமதி வழங்கியது. இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலம் ரூ. 4,851 கோடியும், கா்நாடகம் ரூ.4,509 கோடியும் பெற்றுள்ளது.

இந்தச் சீா்திருத்தத்தில் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டமட்டுமல்லாது, எளிதில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், மின்துறை ஆகியவைகளில் சீா்திருத்தங்களில் அமல்படுத்தும் மாநிலங்களுக்கும் கூடுதலாக கடன் பெற மத்திய நிதித்துறை அனுமதித்து வருகிறது. இவைகள் மூலம் இந்த மாநிலங்கள் இதுவரை மொத்தம் ரூ.61,339 கோடி வரை கூடுதல் கடன் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் நிதித்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.