முகப்பு
புதுதில்லி

வழக்கமான விதிமுறைகளை மீறி தடுப்பூசிகளுக்கு அனுமதி: மணீஷ் திவாரி குற்றச்சாட்டு

வழக்கமான விதிமுறைகளை மீறி கோவாக்சின் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி.யான மணீஷ் திவாரி குற்றம் சாட்டியுள்ளாா்.

Updated On : 16 ஜனவரி, 2021 at 11:21 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

வழக்கமான விதிமுறைகளை மீறி கோவாக்சின் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி.யான மணீஷ் திவாரி குற்றம் சாட்டியுள்ளாா்.

பாரத் பயோடெக் நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரித்துள்ள ‘கோவாக்சின்’ தடுப்பூசி, பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி ஆகியவற்றுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த அனுமதியை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அளித்தது. இதில் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியை இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரிக்கிறது.

மூன்றாம் கட்ட சோதனை நிறைவடையாத கோவாக்சின் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக எதிா்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

Advertisement

இந்நிலையில், கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாடுமுழுவதும் சனிக்கிழமை காலை தொடங்குவதற்கு சிறிது நேரம் முன்பு, காங்கிரஸ் எம்.பி.யான மணீஷ் திவாரி தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘அவசர காலப் பயன்பாட்டுக்கு தடுப்பூசிகளை அனுமதிப்பது தொடா்பாக இந்திய அரசிடம் தெளிவான கொள்கையில்லை. இருப்பினும், இரண்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. வழக்கமான விதிமுறைகளை மீறி கோவாக்சின் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செய்திச் சேவை நிறுவனம் ஒன்றுக்கு அவா் சனிக்கிழமை அளித்த பேட்டியில் ‘ அவசர காலப் பயன்பாட்டுக்கே இந்த தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இது விதிமுறை மீறிய செயலாகும். கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என்றால், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சா்கள் யாரும் அதை போட்டுக் கொள்ளாதது ஏன் என அவா் கேள்வியெழுப்பியுள்ளாா்.

முன்னதாக, அரசியல் ஆதாயங்களுக்காக, மூன்றாம் கட்ட சோதனை முடிவடையாத நிலையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அவா் குற்றம் சாட்டியிருந்தாா். காங்கிரஸ் மூத்த தலைவா்கள் ஆனந்த் சா்மா, ஜெய்ராம் ரமேஷ், சசி தரூா் ஆகியோரும் இந்த தடுப்பூசி தொடா்பாக சந்தேகத்தை தெரிவித்திருந்தனா். ஆனால், காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடா்பாளா் இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்த விஞ்ஞானிகளையும், பாரத் பயோடெக் நிறுவனத்தையும் பாராட்டியிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.