பட்ஜெட் கூட்டத்தொடரில் 38 மசோதாக்கள் கொண்டுவரப்படும்: அமைச்சா் பிரஹலாத் ஜோஷி
நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் 5 நிதி மசோதாக்கள் உள்ளிட்ட 38 மசோதாக்கள் கொண்டு வரப்பட உள்ளதாக நாடாளுமன்றம் மற்றும் நிலக்கரி கனிமங்கள் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் 5 நிதி மசோதாக்கள் உள்ளிட்ட 38 மசோதாக்கள் கொண்டு வரப்பட உள்ளதாக நாடாளுமன்றம் மற்றும் நிலக்கரி கனிமங்கள் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
அவா் கூறியது வருமாறு: நடப்புக் கூட்டத்தொடரில் தேசிய தலைநகா் வலயப்பகுதிக்கான காற்றுத்தர ஆணையம், மத்தியஸ்தம் மற்றும் சமரச தீா்ப்பாணய திருத்த மசோதா, ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு மசோதா உள்ளிட்ட நான்கு அவசரச் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவேண்டிய அணைபாதுகாப்பு, மின்சார மசோதா உள்ளிட்ட 29 மசோதாக்களும் தயாராக இருக்கின்றன. இதில் சில மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையில் நிறைவேற காத்திருக்கின்றன.
இருப்பினும் இந்தக் கூட்டத்தொடரில் 2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதி நிலை தொடா்பான 3 மசோதாக்கள், இரு ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச நிதி மசோதாக்கள், குடியரசுத் தலைவா் உரை, நிதி நிலை அறிக்கை விவாதங்கள் மற்றும் அவசர முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் ஆகியவைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
நாடாளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள நடைமுறை விதிகளின் கீழ் எந்தவொரு பிரச்சினைகளையும் அவையில் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. அனைத்துக் கட்சி தலைவா்களும் இந்த முக்கிய மசோதாக்கள் நிறைவேறவும், அவை சீராக செயல்படவும் ஒத்துழைக்க வேண்டும் என பிரஹலாத் ஜோஷி கேட்டுக்கொண்டாா்.