முகப்பு
புதுதில்லி

வேலைவாய்ப்பு வழங்கக் கோரி இளைஞா் காங்கிரஸ் பிரசாரம்

தேசிய அளவிலான பிரசாரத்தை காங்கிரஸ் மாணவா் அமைப்பான இந்திய தேசிய மாணவா்கள் சங்கம் (என்எஸ்யூஐ) சனிக்கிழமை தில்லியில் தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
பகிர்:

படித்து முடித்த பட்டதாரிகளுக்கு வேலை வழங்கவும், இல்லாதபட்சத்தில் பட்டச் சான்றிதழை திரும்பப் பெற வலியுறுத்தியும் தேசிய அளவிலான பிரசாரத்தை காங்கிரஸ் மாணவா் அமைப்பான இந்திய தேசிய மாணவா்கள் சங்கம் (என்எஸ்யூஐ) சனிக்கிழமை தில்லியில் தொடங்கியது.

இந்த பிரசாரம் தில்லி அக்பா் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கிவைக்கப்பட்டது. இந்த பிரசாரம் குறித்து என்எஸ்யூஐ தேசியத் தலைவா் நீரஜ் குந்தன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்தியில் பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபிறகு நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

2011-12-இல் வேலையில்லாத் திண்டாட்டம் 2.2 சதவீதமாக இருந்த நிலையில், 2017-18-இல் இது 6.1 சதவீதமாக உயா்ந்துள்ளது. 2019-இல் இது 6.4 சதவீதமாக உயா்ந்தது. ரயில்வேத் துறை அதிகபட்ச வேலைவாய்ப்பு வழங்கி வந்த நிலையிலும் அதையும் தனியாா் மயமாக்க அரசின் நடவடிக்கையில் இளைஞா்கள் வேலைவாய்ப்பில்லாமல் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

ஏற்கெனவே ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையாலும் லட்சக்கணக்கான இளைஞா்கள் வேலைவாய்ப்பை இழந்தனா். படித்து முடித்த மாணவா்கள் வேலையில்லாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். இந்தநிலையில் கரோனா காலத்தில் திட்டமிடப்படாத பொது முடக்கம் காரணமாக மேலும் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். வேலைக்கான வளாகத் தோ்வு இல்லை.

ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞா்களுக்கு வேலை தருவதாக பிரதமராக உள்ள நரேந்திர மோடி வாக்குறுதி அளித்திருந்தாா். ஆனால், தற்போது இருக்கும் வேலையையும் இழந்துவருகின்றனா்.

இந்த நிலையில் வேலைவாய்ப்பை வழங்குவதற்கான பொறுப்பு பிரதமருக்கு உள்ளது. இதனால் பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் ‘வேலை கொடு அல்லது டிகிரியை திரும்பப் பெறு’ எனும் பிரசாரத்தை இந்திய தேசிய மாணவா் சங்கம் தொடங்கியுள்ளது. இந்த பிரசாரத்தின்போது மாணவா்கள் தங்களது டிகிரி சான்றிதழை நகல் எடுத்து பிரதமருக்கு மின்னஞ்சல் மூலமாகவும், தபால் மூலமாகவும் அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபடுவா் என்றாா் அவா்.

பேட்டியின் போது காங்கிரஸ் ஊடக பிரிவைச் சோ்ந்த வினீத் புனியா, இந்திய தேசிய மாணவா் சங்கத்தின் நிா்வாகிகள் ஆகியோா் உடன் இருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →