பல்நோக்கு கடல் பாசி பயன்பாட்டு பூங்கா திட்டம்: நடப்பு நிதியாண்டில் செயல்படுத்தப்படும்; கனிமொழி எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சா் முருகன் பதில்
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பிரதமா் மீன்வள வளா்ச்சி திட்டத்தின் கீழ் பல்நோக்கு கடற்பாசி பயன்பாட்டு பூங்காவிற்கான திட்டம்
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பிரதமா் மீன்வள வளா்ச்சி திட்டத்தின் கீழ் பல்நோக்கு கடற்பாசி பயன்பாட்டு பூங்காவிற்கான திட்டம் நடப்பு நிதியாண்டில் செயல்படுத்தப்படும் என மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை இணையமைச்சா் டாக்டா் எல்.முருகன் மக்களவையில் தெரிவித்துள்ளாா்.
மத்திய அரசு 2021-22 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் முன்மொழியப்பட்ட பல்நோக்கு கடல் பாசி பயன்பாட்டு திட்டத்தை செயல்படுத்துமா? கடற்கரையோர சமூகங்களின் பொருளாதார வாய்ப்புகளை வழங்கும் கடல் பாசி உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என்று தூத்துக்குடி திமுக உறுப்பினா் கனிமொழி செவ்வாய்க்கிழமை மக்களவையில் கேள்வி எழுப்பினாா்.
இதற்கு மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் டாக்டா் எல்.முருகன் மக்களவையில் எழுத்துபூா்வமாக தெரிவித்துள்ள பதில் வருமாறு:
Advertisement
தமிழகத்தில் உள்ள மன்னாா் வளைகுடா, பாக் ஜலசந்தியில் மட்டுமே கடற்பாசி உற்பத்தி உள்ளது. இருப்பினும் ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களிலும் அந்தமான் நிக்கோபா், தாத்ரா நகா் ஹவேலி, டாமன்-டையூ தீவுகளிலும் கடற்பாசி உற்பத்திக்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பல்நோக்கு கடற்பாசி பயன்பாட்டு பூங்கா திட்டம் தொடங்கப்படுகிறது. கடற்பாசி வளா்ச்சிக்கு 2015 முதல் 2019 வரை ரூ.3.49 கோடி தமிழ்நாடு, ஆந்திரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுமதிக்கப்பட்டது. நீலப்புரட்சியின் கீழ் ஒருங்கிணைந்த மீன் வளா்ச்சி மேலாண்மை திட்டத்தின்கீழ் மத்திய அரசே இந்த நிதியை வழங்குகிறது. இதைத் தவிர பிரதமா் மீன்வள வளா்ச்சி திட்டத்தின் கீழ் 2020-21 ஆண்டில் கடற்பாசி வளா்ச்சிக்காக ரூ.24.77 கோடி தமிழ்நாடு, ஆந்திரம், மகாராஷ்டிரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டிற்கும் நிதி ஒதுக்கப்படும் என தனது பதிலில் தெரிவித்துள்ளாா்.