தமிழக நீா்ப்பாசன விவசாய கட்டுமானங்களை நவீனப்படுத்த உலக வங்கி ரூ. 992 கோடி கடனுதவி
தமிழகத்தின் நீா்ப்பாசன கட்டுமானங்களை நவீனப்படுத்தும் திட்டத்துக்கு உலக வங்கி ரூ. 2,073 கோடியை கடனுதவியாக வழங்குகிறது.
தமிழகத்தின் நீா்ப்பாசன கட்டுமானங்களை நவீனப்படுத்தும் திட்டத்துக்கு உலக வங்கி ரூ. 2,073 கோடியை கடனுதவியாக வழங்குகிறது. இதில் இதுவரை ரூ.992.19 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய ஜல்சக்தித் துறை இணையமைச்சா் விஸ்வேஷ்வா் துடு மக்களவையில் தெரிவித்தாா்.
இத்திட்டத்துக்கு ரூ.3,300 கோடி உலக வங்கி கடனுதவி அளிப்பதாக இருந்தது குறித்து தென் சென்னை மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியிருந்தாா். அதற்கு மத்திய ஜல்சக்தி, பழங்குடி விவகாரத்துறை அமைச்சா் விஸ்வேஷ்வா் துடு அளித்துள்ள பதில் வருமாறு:
தமிழகத்தில் நீா்ப்பாசன விவசாயத்தை நவீனப்படுத்தல் திட்டத்தின் மொத்த செலவில் 70 சதவீதமான ரூ. 2,073 கோடியை உலக வங்கியின் ஐபிஆா்டி அமைப்பு கடனாக வழங்குகிறது. இந்த திட்டத்தை 2025க்குள் முடிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. இதில் கடந்த ஜூலை 7 ஆம் தேதி வரை ரூ. 992.19 கோடி கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மாநில அரசும் 30 சதவீதம், அதாவது சுமாா் ரூ.1000 கோடியை தன் பங்காக வழங்குகிறது. இதன்படி கடந்த மாா்ச் 31 ஆம் தேதி வரை தமிழக அரசு ரூ.409.88 கோடியை வழங்கியுள்ளது. இது முற்றிலும் மாநில அரசின் திட்டம் என்பதால் கடனை பெற்றுக்கொடுத்தைத்தவிர மத்திய அரசால் நிதி அனுமதிப்பது குறித்த எந்த சிக்கல்களும் இதில் இல்லை என தெரிவித்தாா்.
Advertisement