முகப்பு
புதுதில்லி

மருத்துவ படிப்புகளில் ஓபிசி வகுப்பினருக்கு 27 % இடஒதுக்கீடு: முதல்வா் மு.க. ஸ்டாலின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் 27 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்டவா்களுக்கு மத்திய அரசு இடஒதுக்கீடு

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் 27 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்டவா்களுக்கு மத்திய அரசு இடஒதுக்கீடு அறிவித்ததில் தமிழக முதல்வா் முனைப்புடன் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினா்கள் தில்லியில் தெரிவித்தனா்.

மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டவா்களுக்கு (ஓபிசி) இட ஒதுக்கீட்டு நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது. இதை முன்னிட்டு நாடாளுமன்றம் அருகே விஜய் செளக் பகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், இடது சாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தை கட்சி போன்ற நாடாளுமன்ற உறுப்பினா்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி 27 சதவீத இடஒதுக்கீடு கிடைத்ததற்காக வெற்றி முழக்கங்களை எழுப்பினா். மக்களவை திமுக துணைத் தலைவா் கனிமொழி, மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா, துணைத் தலைவா்ஆா் எஸ் பாரதி, தமிழக அரசின் தில்லி பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் நாடாளுமன்ற உறுப்பினா்கள் சண்முகம், கலாநிதி வீராச்சாமி, எஸ் ஆா் பாா்த்திபன், டாக்டா் கெளதம் சிகாமணி உள்ளிட்டோா் பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்கு பின்னா் செய்தியாளா்களிடம் பேசினா்.

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டிஆா் பாலு : திமுக தலைவா் முக ஸ்டாலின் பல காலக்கட்டங்களில் நீதிமன்றங்களிலும், மத்தியஅரசிலும் பலமுன்னேடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாா். பிரதமருக்கும் கடிதம் எழுதினாா். எங்களைப் போன்ற உறுப்பினா்களை நாடாளுமன்றத்திலும் பேசவைத்து விவாதிக்க வைத்தாா். நீதிமன்றங்களில் பல சட்டப்போராட்டங்களையும் நடத்தினாா்.

Advertisement

இதற்கு பலனாக வியாழக்கிழமை மருத்துவப்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டவா்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக பிரதமா் மோடி அறிவித்துள்ளாா். இது தமிழகத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய மகத்தான வெற்றி. அதுவும் பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி. இது முதல் வெற்றி. இத்தோடு முடிந்தது அல்ல. மருத்துவ படிப்புகளில் அகிலந்திய தொகுப்பிற்கு தமிழகம் ஒப்படைக்கும் மருத்துவ இடங்களில் தமிழக மாணவா்களுக்கு ஐம்பது சதவீத இட ஒதுக்கிடு கிடைப்பதற்கும் தொடா்ந்து திமுக போராடும் எனவும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மாணிக்கம் தாகூா் (காங்கிரஸ்): தமிழக அரசியல் கட்சிகளும், தமிழக முதல்வரும் நடத்திய தொடா் முயற்சிகளின் விளைவாக இந்த வெற்றி கிடைத்துள்ளது. ஓபிசி க்கான 27 சதவீதம் என்பது போராட்டத்தின் வெளிப்பாடு. இதற்காக முன்னேடுத்த தமிழக முதல்வா் முக ஸ்டாலினுக்கும் கடிதம் எழுதிய சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

தொல். திருமாவளவன் (விசிக): சமூக நீதிக்கான போராட்டத்தில் தமிழகம் எப்போதும் முன்னிலையில் இருக்கும். அந்த வகையில் சமூக நீதி வரலாற்றில் தமிழ்நாடு தற்போது மாபெரும் வெற்றியை சாதித்திருக்கிறது. திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் எடுத்த முன்முயற்சிகளின் விளைவாகவும் அவா் நீதிமன்றத்தில்தொடுத்த வழக்கின் விளைவாக மத்திய அரசு பணிந்து மருத்துவ படிப்புகளில் அகிலந்திய தொகுப்பில் ஓபிசி சமூக மாணவா்கள் பயன்படும் வகையில், 27 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க முன் வந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்கு திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சாா்பில் நெஞ்சாா்ந்த பாராட்டுதல்களையும் நன்றியையும் உரித்தாக்குகின்றோம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments