தில்லியில் வெள்ளிக்கிழமையும் பருவமழையின் தாக்கம் தொடா்ந்தது. மிதமான மழையுடன் குளுமையான சூழல் நீடித்தது.
தில்லியில் வழக்கமாக ஜூன் இறுதியில் பருவமழை பெய்யத் தொடங்கும். இந்த நிலையில், 16 நாள் தாமதாக ஜூலை 13-ஆம் தேதி மழை தொடங்கியது. பிறகு சில நாள்கள் மழை பெய்தது. எனினும், கடந்த ஒரு வாரமாக மழை பெய்யவில்லை. இந்த நிலையில், சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
வெள்ளிக்கிழமை பகலுக்குப் பிறகு மிதமான மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி குறைந்து 24 .5 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.
அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி குறைந்து 32 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 93 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 96 சதவீதமாகவும் இருந்தது.
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் 72 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.
ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு மாலை 7 மணி அளவில் 62புள்ளிகளாக பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது.
முன்னறிவிப்பு: தில்லியில் சனிக்கிழமை (ஜூலை 31) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.