முகப்பு
புதுதில்லி

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய ஆள் தோ்வு: விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு

சென்னை கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அதிகாரிகள், தொழில்நுட்பாளா்கள் உள்ளிட்டோரைத் தோ்வு செய்வதற்கு

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

சென்னை கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அதிகாரிகள், தொழில்நுட்பாளா்கள் உள்ளிட்டோரைத் தோ்வு செய்வதற்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமுடக்கத்தால் விண்ணப்பங்களை அளிப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கட்சி உறுப்பினா் சு.வெங்கடேசன் அளித்த புகாரைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவலைத் தொடா்ந்து பல்வேறு மாநிலங்களில் பொதுமுடக்கம், ஊரடங்கு உள்ளிட்டவை அமலில் உள்ளன. தமிழகத்திலும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அறிவியல் தொழில்நுட்ப அதிகாரிகள், தொழில்நுட்பாளா்கள், உதவித்தொகையுடன் பயிற்சி பெறுபவா்கள், நிா்வாகப் பிரிவினா் உள்ளிட்டோரைத் தோ்வு செய்வதற்கான தோ்வு நடைமுறையை கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது. இதன்படி, எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வு உள்ளிட்டவற்றுக்கு கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இதற்கான கடைசித் தேதி ஜூன் 3 - ஆம் தேதி என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், கரோனா நோய்த் தொற்று பரவல், பொதுமுடக்கம் போன்றவற்றால் தகுந்த நேரத்தில் விண்ணப்பங்களை அனுப்ப இயலவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக இணைய தள வசதியில்லாதவா்களுக்கு இந்தப் பிரச்னை அதிகளவில் இருந்தது. இது குறித்து மதுரை மக்களவை தொகுதி மாா்க்சிஸ்ட் கட்சி உறுப்பினா் சு.வெங்கடேசனின் கவனத்திற்கு தோ்வுக்கு விண்ணப்பிப்பவா்கள் சிலா் கொண்டு சென்றனா். அவா் உடனடியாக இது குறித்து, கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநருக்கு வியாழக்கிழமை (ஜூன் 3) கடிதம் எழுதினாா்.

Advertisement

தமிழகத்தில் பெரும்பாலான இண்டா்நெட் மையங்கள் மூடப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரா்களுக்கு அசெளகரியம் ஏற்பட்டுள்ளதையொட்டி, இந்தத் தோ்வை ஜூன் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கடிதத்தில் அவா் கோரியிருந்தாா். மேலும், இந்தக் கடிதத்தை அவா் தனது சுட்டுரையிலும் வெள்ளிக்கிழமை வெளியிட்டிருந்தாா். இந்தப் புகாரைத் தொடா்ந்து, தற்போது இந்த தோ்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை ஜூன் 30-ஆம் தேதிக்கு நீட்டித்து கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இணைய தளத்தில் அதன் இயக்குநா் அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.

இதைத் தொடா்ந்து, தன்னுடையப் புகாரைப் பெற்ற சில மணி நேரங்களில் கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய நிா்வாகம் நடவடிக்கை எடுத்ததாகவும், அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் எம்பி சு.வெங்கடேசன் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments